46 ஆயிரம் பேர் பள்ளிக்கே வராதவர்களா? பின்னணியில் ஊழல்? - சந்தேகம் கிளப்பும் பாஜக நாராயணன்!
படிக்காத மாணவர்களை படிப்பதாக கணக்கு காண்பிக்கும் மர்மம் என்ன என பாஜக நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாத நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, அதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் தமிழ் பாட தேர்விற்கு 50,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வராதது அதிர்ச்சி அளித்தது.
தொடர்ந்து ஆங்கில தேர்விலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை. இது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இதில் பெரும்பாலானோர் 11ஆம் வகுப்போடு இடைநின்றவர்கள் மற்றும் +2 சேர்ந்த சில நாட்களிலேயே பள்ளிக்கு வராமல் நின்றுவிட்டவர்கள் என்றும், அவர்களுக்கும் ஹால் டிக்கெட் எண் வழங்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின.

46 ஆயிரம் மாணவர்கள்
இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் +2 தேர்வுகளுக்கு 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதில் 46 ஆயிரம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத முடியாத அளவிற்கு கல்வித் தரம் குறைந்துள்ளதா? இந்த மாணவர்களின் அச்சத்திற்கு காரணம் என்ன? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், 46 ஆயிரம் மாணவர்களும் இடை நின்றவர்கள் என்று, அதாவது 11ஆம் வகுப்பிலேயே பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

மர்மம் என்ன
படிக்காத மாணவர்களை படிப்பதாக கணக்கு காண்பிக்கும் மர்மம் என்ன? இது உண்மையென்றால், கடந்த இரு வருடங்களாக அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்கின்றனர் என்று திமுக அரசு அறிக்கைவிட்டுக் கொண்டிருந்தது உண்மைக்குப் புறம்பானது என்பது புலனாகிறது. அப்படியென்றால், தவறான செய்தியை வெளியிட்டு விளம்பரப்படுத்தி கொண்டது ஏன் என்பதை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விளக்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வருடமும் சுமார் ரூபாய் 70,000 மதிப்பில் இலவச சீருடை, மடிக்கணினி, சைக்கிள், பாடப் புத்தகங்கள், கட்டண சலுகை மற்றும் இதர சலுகைகளை தமிழக அரசு செலவிடுகிறது.

70,000 ரூபாய்
இந்நிலையில், இடைநிற்றலால் தேர்வுக்கு வரவில்லை என்று குறிப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் மேற்கண்ட சலுகைகள் அளிக்கப்பட்டனவா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லாத மாணவர்கள் இருப்பதாக கணக்கு காண்பிக்கப்பட்டிருந்தால் பெரும் ஊழல் இந்த விவகாரத்தில் நடந்திருப்பதாக உறுதியாகச் சொல்ல முடியும். அதாவது 46000 * 70,000 ரூபாய். அதாவது+1 வகுப்பிற்கு ரூபாய் 322 கோடியும்,+2 வகுப்பிற்கு 322 கோடியும், ஆக மொத்தம் ஒவ்வொரு வருடமும் ரூபாய் 644 கோடி கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா? இல்லாத மாணவர்கள் இருப்பதாக காண்பிக்கப்பட்டு முறைகேடு நடக்கிறது என்பதை மறுக்க முடியுமா? ஒருவேளை, இந்த இலவசங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால், 46,000 மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்ந்திருப்பார்கள் என்பதும் உறுதி.

ஊழல்
மாணவர்கள் படிப்பை தொடராமல் இருந்திருந்தாலும், தொடர்ந்திருந்து தேர்வு எழுத வராது இருந்திருந்தாலும், அதற்கு கல்வித் துறை அதிகாரிகளும், கல்வி அமைச்சரும் தான் பொறுப்பு. இந்த விவகாரத்தில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் அதற்கும் திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். ஆகையால் நடந்த குற்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து பொறுப்பேற்பதோடு, கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications