தரக்குறைவான வார்த்தைகளை உச்சரித்த பிரபல நடிகர்.. ஓடிடியில் அப்படியே வருதே “சீரழிவு”.. கண்டித்த பாஜக!
துணிவு திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி இருக்கும் நிலையில், சென்சாரில் கட் செய்யப்பட்ட வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்சார் போர்டு நீக்கிய வசனங்கள் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும்போது இடம்பெற்றிருப்பது சமூகத்திற்கு பெரும் கேடு என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு, விதிமீறல்கள் உள்ள காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டு, அதன்பிறகே திரையரங்குகளில் படங்கள் வெளியாகின்றன.
அதே திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படும்போது திரையரங்கில் வெளிவந்தபோது, நீக்கப்பட்ட காட்சிகள், வசனங்களை எல்லாம் அதில் இணைத்து வெளியிடுகின்றனர் என பாஜக நாராயணன் தெரிவித்துள்ளார்.

பாஜக நாராயணன்
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைப்படங்களை முறைப்படுத்துவதற்கு திரைப்பட சான்றிதழ் வாரியம் செயல்பட்டு வருகிறது. திரைப்படங்கள் வெளியாவதற்கு முன் இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் இந்த படங்களை பார்வையிட்டு விதிகளின் படி காட்சிகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து விதிமீறல்கள் உள்ள காட்சிகளை, வசனங்களை நீக்கச் சொல்லிய பின்னர் மீண்டும் பார்வையிட்டு திரைப்படத்தை வெளியிடுவதற்கான சான்றிதழை அளிப்பார்கள்.

ஓடிடி ரிலீஸ்
திரைப்பட சான்றிதழ் வாரியத்தை பொறுத்தவரை ஆபாசமான, அதிக வன்முறைமிக்க காட்சிகளையும், தரக்குறைவான வசனங்களையும் மட்டுமே நீக்கச் சொல்வது வழக்கம். சமீப காலங்களில் இணைய வழி சினிமா திரை (OTT) மூலம் இந்த படங்கள் விரைவில் வெளிவருகின்றன. அப்படி இணையவழி திரையில் வெளிவரும் வேளையில், நீக்கப்பட்ட காட்சிகளை, வசனங்களை அதில் இணைத்து வெளியிடுகின்றனர். அதாவது எது தவறு, ஆபாசம், விதி மீறல் என்று குறிப்பிட்டு நீக்கப்பட பரிந்துரைக்கப்பட்டனவோ அவற்றை இணைத்து திரையிடுகின்றனர்.

தரக்குறைவான வார்த்தைகள்
இது அப்பட்டமாக சமுதாயத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய செயலாகும். சமீபத்தில் பொங்கலையொட்டி வெளியான ஒரு பிரபல நடிகர் நடித்த படத்தில் இடம்பெறாத சில காட்சிகளும், வசனங்களும் OTT திரையில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் படத்தில் தரக்குறைவான வார்த்தைகளை அந்த பிரபல நடிகரே உச்சரிப்பது கடும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக பலமுறை திரைப்பட சான்றிதழ் வாரிய குழுவால் நீக்கப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது சமுதாய சீரழிவுக்கே வழிவகுக்கும்.

திரைத்துறையினரின் கடமை
இதுகுறித்து அத்திரைப்படம் தொடர்பான முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசிய போது, இது போன்ற தகாத, தீய சொற்களை தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் விரும்புவதாக சொன்னது பேரதிர்ச்சியை அளிக்கிறது. சமுதாயத்தை சீர்படுத்த வேண்டிய, முறைப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனால், தங்களின் பட வெற்றிக்காக, வியாபாரத்திற்காக அடுத்த தலைமுறையை சீரழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இணைய வழி திரைக்கு சில சுயகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அரசு. அதை பின்பற்ற வேண்டியது திரைத்துறையினரின் கடமை.

சமுதாயத்தை சீரழிக்கலாமா
எது தவறு, தீங்கானது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்று குறிப்பிடப்பட்டு திரைத்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டதோ, அதையே வேறொரு வழியில் மக்களிடம் கொண்டு செல்வது துரோகம் அல்லவா? குறிப்பாக தங்களின் ஆதர்ச நாயகர்களாக பாவித்துக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் விதத்தில் காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறாமல் கவனித்துக்கொள்ள வேண்டியது பிரபல கலைஞர்களின் கடமையல்லவா? சுய கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு, சுய தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் அரசின் கட்டுப்பாடு இல்லையென்ற ஒரே காரணத்திற்காக சமுதாயத்தை சீரழிக்கலாமா? அதிலும் பிரபலமான நடிகர்கள், இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டாமா?

சுதந்திரத்தை முறையாக பயன்படுத்தவேண்டும்
அரசின் வழிகாட்டுதல்களின் படி, சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியது திரைத்துறையினரின் கடமை மற்றும் பொறுப்பு. அதை விடுத்து, பணத்திற்காக வியாபாரத்திற்காக சமூகத்தை சீரழிக்கும் அவலங்களை திணிப்பது கேட்டை விளைவிக்கும். இருக்கும் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்துவதே அழகு. இல்லையேல், அந்தச் சுதந்திரம் கேள்விக்குறியாகி விடும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications