6 மாதங்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு
சென்னை: தமிழக அரசியலில் அடுத்த 6 மாதங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்த முறை பாஜக எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டமன்றத்திற்குள் அமர்வது உறுதி என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

பரபரப்பு நிகழ்வுகள்
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றது முதல் அக்கட்சியில் பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. திமுகவில் இருந்து இரண்டு முக்கிய பிரமுகர்களை வளைத்ததோடு சினிமா, தொழில்துறைகளில் இருந்தும் பல பிரபலங்களை பாஜகவில் இணைத்து வருகிறார் எல்.முருகன். இதற்காக தனிக்குழுவை அமைத்துள்ள அவர் கட்சியை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்.

அரசியல் மாற்றம்
இதனிடையே பாஜக மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்திய முருகன், நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார். அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என அவர் கூறியிருக்கிறார். ஆகையால் தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முருகன் பேச்சு
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த மாவட்டங்களில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெறுகிறார்களோ அந்த மாவட்டச் செயலாளர்களுக்கு பெரிய பரிசு ஒன்று காத்திருப்பதாகவும் உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் 6 மாதங்களில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்ற முருகனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி
தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எல்.முருகன், ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என உறுதிப்படத் தெரிவித்தார். பாஜக யாரை கை காட்டுகிறதோ அந்தக் கட்சி தான் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவின்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications