சென்னை வங்கியில் கேட்பாரற்று 1 கிலோ தங்கம் கிடந்த விவகாரத்தில் ட்விஸ்ட்.. பர்தா அணிந்து வந்த பெண் யார்?
சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள வங்கிக்கு வந்த பர்தா அணிந்த பெண் ஒருவர் தனது கைப்பையை விட்டு சென்றார். அந்த கைப்பையை எடுத்து பார்த்ததில் அதில், ஒரு கிலோ தங்க பிஸ்கட்களும், 250 கிராம் தங்க நகைகளும் இருந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் தங்க பிஸ்கட், தங்க நகைகளை ஒப்படைத்தார். இந்த நகைகளை விட்டு சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்ததில் அந்த வங்கியில் வேலை பார்த்த முன்னாள் மேனேஜர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆம் தேதி பர்தா அணிந்த பெண் தனக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றும், லாக்கர் வசதி எப்படி இருக்கிறது என்ற விவரங்களை கேட்டு விட்டு உரிய ஆவணங்கள் எடுத்து வருகிறேன் என்று சொல்லி தங்க நகை அடங்கிய பையை அங்கேயே விட்டு சென்றிருந்தார். கேட்பாரற்று கிடந்த அந்த ஒரு கிலோ 256 கிராம் தங்கத்தினை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.

பர்தா அணிந்து வந்த பெண்
சென்னை வேளச்சேரியில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கிக்கு கடந்த 5 ஆம் தேதி பெண் ஒருவர் வந்திருந்தார். அப்போது அவர் தன் பெயர் ஷர்மிளா பானு எனவும், வங்கியில் எனக்கு ஒரு கணக்கு தொடங்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அப்போது அதற்கு என்னென்ன ஆவணம் தேவை என்ற விவரங்களை வங்கி ஊழியர்கள் எடுத்து கூறினர்.
இதன்பின்னர் வங்கியில் லாக்கர் வசதி எப்படி? என கேட்டிருக்கிறார். இதற்கும் வங்கி ஊழியர்கள் விளக்கம் அளித்ததையடுத்து, உரிய ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். அப்போது அவர் தான் கொண்டு வந்திருந்த கைப்பையை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். நீண்ட நேரமாக அந்த கைப்பை அங்கேயே இருந்த நிலையில் வங்கி ஊழியர்கள் அதை எடுத்து வைத்தனர்.
கைப்பையில் ஒரு கிலோ தங்க கட்டிகள்
கைப்பையை விட்டு சென்ற வாடிக்கையாளர்கள் வந்து வாங்கி செல்வார்கள் என நினைத்து வங்கி ஊழியர்கள் மேலாளரிடம் ஒப்படைத்தனர். அப்போது அந்த கைப்பை உள்ளே பார்த்ததில் ஒரு கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்கள் இருந்தன. மேலும் 256 கிராம் எடை கொண்ட தங்க நகைகளும் இருந்தன. இதனால் வங்கி அதிகாரி அதிர்ச்சியடைந்தார்.
ஆனால் ஒரு வாரம் ஆகியும் இந்த கைப்பையை உரிமை கோரி யாரும் வங்கிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்து தங்க பிஸ்கட்கள் மற்றும் நகைகளை ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அந்த வங்கியின் முன்னாள் மேனேஜர்
வங்கிக்கு ஷர்மிளா பானு என்று சொல்லி வந்த பெண் யார் எனவும், உண்மையிலேயே அது அவரது நகை தானா அல்லது கடத்தல் தங்கமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் திடீர் திருப்பமாக கைப்பையை விட்டு சென்றது அந்த வங்கியில் வேலை பார்த்த முன்னாள் மேலாளர் என்பது தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணையில் இதே ஹெச்டிஎப்சி வங்கியில் முன்னாள் மேலாளராக வேலை பார்த்து வந்த பத்மபிரியா என்ற பெண் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பத்மபிரியா ஏற்கனவே இதே வங்கியில் வேலைபார்த்தபோது, வங்கி லாக்கரில் நீண்ட நாட்களாக இருக்கும் தங்க நகைகளை போலி சாவியின் மூலமாக திருடியாக கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் தான் மீண்டும் இந்த வங்கிக்கு பர்தா அணிந்தபடி வந்து லாக்கர் பற்றிய விவரங்களை கேட்டிருக்கிறார். அப்போது இந்த கைப்பையை விட்டு சென்று இருக்கிறார். அந்த நகை அவருக்கு எப்படி வந்தது என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications