இனி சிறப்பு நாட்களில்.. சத்துணவோடு சர்க்கரை பொங்கல் ட்ரீட்! தமிழக மாணவர்களுக்கு ஸ்டாலின் குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளன்று பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சர்க்கரை பொங்கல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே மதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் 30 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காலை உணவு திட்டம்: அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டம் பற்றி பேசி உள்ளார்.
எப்படி செயல்படுகிறது: திட்டம் செயல்படுத்தும் முறை: சென்னை மாநகராட்சி, மற்ற பெருநகர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஒருங்கிணைந்த சமையற்கூடங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி சத்துணவு மையங்களை இணைத்து கிராம ஊராட்சி மற்றும் மலைப் பகுதி மையங்களில் இத்திட்டம் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி / சுய உதவிக் குழு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உணவு என்ன?: உணவு திங்கள் கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா / சேமியா உப்புமா / அரிசி உப்புமா / கோதுமை ரவை உப்புமா; செவ்வாய் கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி / சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி; புதன்கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய கூடிய ரவா பொங்கல் / வெண் பொங்கல்; வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா / அரிசி உப்புமா / ரவா உப்புமா / கோதுமை ரவை உப்புமா; வெள்ளிக்கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / ரவா காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
சர்க்கரை பொங்கல்; தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளன்று பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சர்க்கரை பொங்கல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
அதன்படி முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாள் அன்று இந்த சர்க்கரை பொங்கல் வழங்கப்படும். மதிய உணவுடன் சேர்த்து சர்க்கரை பொங்கல் வழங்கப்படும். 42 லட்சத்து 71 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ரூ. 2 கோடி ரூபாய்க்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications