முக்குலத்தோர் + வன்னியர் + கவுண்டர்.. தமிழக அமைச்சரவையில் எந்த ஜாதியினருக்கு அதிக இடம்! முழு லிஸ்ட்
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறார். மேலும் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 4 பேர் கேபினட்டில் இணைக்கப்பட உள்ளனர். இதன்மூலம் தமிழக அமைச்சரவை முழுவதுமாக நிரம்ப உள்ளது. இந்நிலையில் தான் தமிழக அமைச்சரவையில் எந்தெந்த ஜாதியினருக்கு எத்தனை இடம் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அமைச்சரவை இன்று மாலை 3.30 மணிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

அதேபோல் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.
மேலும் 3 பேர் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் தமிழக அமைச்சரவை முழுவதுமாக நிரம்ப உள்ளது. தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலினை சேர்த்து அதிகபட்சமாக மொத்தம் 35 பேர் தான் இடம்பெற முடியும். தற்போது 34 பேர் அமைச்சரவையில் உள்ளனர். இதில் 3 பேர் நீக்கப்பட்டு 4 பேர் சேர்க்கப்படுகின்றனர். இதன்மூலம் தமிழக அமைச்சரவை மொத்தம் 35 பேருடன் முழுவதுமாக நிரம்புகிறது.
இனி ஒருவரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்றால் அமைச்சராக இருக்கும் ஒருவரை நீக்கினால் மட்டுமே சேர்க்க முடியும். இந்நிலையில் தான் தமிழக புதிய அமைச்சரவையில் எந்தெந்த ஜாதியினருக்கு எவ்வளவு இடம் வழங்கப்பட்டுள்ளது. எந்த ஜாதியினருக்கு அதிக அமைச்சர்கள் உள்ளனர்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்டாலின் - உதயநிதி: அதன்படி தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் இசைவேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதேபோல் இன்று துணை முதல்வராகும் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினும் இசைவேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதற்கு அடுத்தப்படியாக தமிழக அமைச்சரவையில்

முக்குலத்தோர்: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதன்படி முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் 5 பேர் முக்குலத்தோர் சமுதாயத்தினராக உள்ளார்.

பொதுவாக அதிமுக ஆட்சியில் தான் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். திமுகவில் முக்குலத்தோர் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிமுக அளவுக்கு இருக்காது. இருப்பினும் கூட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அதிகமானவர்கள் முக்குலத்தோர் சமுதாயத்தினராக உள்ளனர்.
வன்னியர்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஆகியோர் வன்னியர்கள் ஆவார்கள். இவர்களுடன் இன்று புதிதாக அமைச்சராகும் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏவான ஆர் ராஜேந்திரனும் இணைகிறார். இவரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் தமிழக அமைச்சரவையில் வன்னியர்களின் எண்ணிக்கை என்பது 4 ஆக அதிகரித்துள்ளது.

கவுண்டர்: வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தகவல் - செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கொங்கு வேளாளர் கவுண்டர் ஜாதியை சேர்ந்தவர்கள். இன்று புதிதாக அமைச்சராகும் செந்தில் பாலாஜியும் அதே ஜாதியை சேர்ந்தவர் தான். இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தினரின் எண்ணிக்கை 3ல் இருந்து 4 ஆக உயர்ந்துள்ளது.
நாடார்: சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை அமைச்சராக உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தார். தற்போது அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் நாடார் சமுதாயத்தினருக்கான பிரதிநிதித்துவம் என்பது 3ல் இருந்து 2 ஆக குறைந்துள்ளது.
பட்டியலினத்தவர்கள்: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சரில் இருந்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இன்று மாறும் கயல்விழி செல்வராஜ் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதேபோல் வனத்துறை அமைச்சராக இருந்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இன்று மாறும் மதிவேந்தன் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர். இவர்கள் தவிர இன்று அமைச்சராக பொறுப்பேற்கும் கோவி செழியனும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்களின் எண்ணிக்கை என்பது 3ல் இருந்து 4 ஆக அதிகரிக்கிறது.
யாதவர் - முதலியார்: கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து இன்று பால்வளம் மற்றும் கைத்தறி கிராம தொழில் துறை அமைச்சராக மாறும் ராஜகண்ணப்பன் ஆகியோர் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதன்படி யாதவர் ஜாதியினர் 2 பேர் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மேலும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிறு குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
ரெட்டி - நாயுடு: தமிழக அமைச்சரவையில் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அதாவது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதேபோல் நாயுடு சமுதாயத்தை சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக உள்ளனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு, கைத்தறி அமைச்சர் எம்ஆர் காந்தி, அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
பொன்முடி - ரகுபதி: தமிழக உயர்கல்வித்துறையில் இருந்து வனத்துறை அமைச்சராக இன்று மாறப்போகும் பொன்முடி உடையார் சமுதாயத்தை சேர்ந்தவர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதேபோல் சுற்றுச்ச்சூழல் துறை அமைச்சராக இருந்து இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாறும் மெய்யநாதன் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்: தமிழக அமைச்சரவையில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. செஞ்சி மஸ்தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆவடி நாசர் இன்று புதிய அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இவர் இஸ்லாமியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications