இட்லி, பொங்கல், தோசை, நாட்டுக்கோழி.. அதைவிடுங்க, பாஜகவை சீமான் விடவேயில்லை.. "அந்த பயம் இருக்கட்டும்
சென்னை: "இந்த நாட்டை ஆள்வதற்கு ஒருவர் கூடவா இல்லை? இதற்கு மோடி வரவேண்டுமா, ராகுல் வர வேண்டுமா? காவிரியில் தண்ணீர் வாங்கித் தர துப்பில்லாத உனக்கு எதற்கு தமிழரின் ஓட்டு" என்று கேள்வி மேல் கேட்டுக் கொண்டிருக்கிறார் சீமான்.
இந்த முறையும் வழக்கம்போல் தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி.. இந்த முறையும் வழக்கம்போல், கூட்டணி வைக்க வாய்ப்பு என்றெல்லாம் பரபரப்புகள் கிளம்பிய நிலையில், சிங்கம் எப்போதுமே சிங்கிளாகவே வரும் என்று அதிரடி காட்டி கொண்டிருக்கிறார் சீமான்.

ஆனால், சின்னம் விவகாரத்தைதான் சீமான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. படாதபாடு பட்டும்கூட, சின்னம் கிடைக்கவில்லை.. கடைசியில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிருப்திகள் பல இருந்தாலும், இந்த "மைக்" சின்னத்தை வைத்துக்கொண்டே, பிரச்சாரத்தில் கலக்கி கொண்டிருக்கிறார் சீமான். "இன்று என் சின்னத்தில் தான், நீ ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாய்" என்று எதிர்க்கட்சிகளை திணறடித்து வருகிறார்.
சலசலப்புகள்: அதேபோல, விருதுநகர் தொகுதியில் ஒரு சலசலப்பு வெடித்தது.. அங்குள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி. கவுசிக் என்பவருக்கு தமிழ் படிக்க தெரியாதாம்.. வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளர் கவுசிக்கை உறுதிமொழி படிவத்தை வாசிக்க சொன்னார் கலெக்டர்..
ஆனால் தனக்கு தமிழ் தெரியாது என்று கவுசிக் சொல்லிவிட்டார். காரணம், கவுசிக்கின் பெற்றோர்கள் வட மாநிலத்தில் வசிப்பதால், தமிழ் பேச மட்டுமே தெரியும் என்றாராம்.. தமிழ் படிக்க தெரியாதவர்களுக்கு சீட் தந்துவிட்டார் சீமான் என்று இது தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்தன..
விவசாயி சின்னம்: இதற்கு நடுவில் சீமான் தன்னுடைய பிரச்சாரத்தில், "விவசாயி சின்னத்தை பறித்து மைக் சின்னத்தை கொடுத்து, நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் இல்லை என்பதை நிரூபித்து விட்டார் அண்ணாமலை.. என்னை மிகப்பெரிய தலைவனாக்க பாஜகவில் இருந்து அண்ணாமலை போராடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு எனது அன்பும், நன்றியும்.." என்று கிண்டலாக பேசி, பாஜகவின் B டீம் இல்லை என்பதையும் புரிய வைத்து வருகிறார் சீமான்.
அதுமட்டுமல்ல, சீமானுடன், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அரசியல் ஆலோசகர், உதவியாளர்கள், 15க்கும் மேற் பட்ட பவுன்சர்களுடன் வலம் வருகின்றனர்.
முக்கிய நிர்வாகிகள்: பிரச்சாரத்திற்கு எந்தெந்த மாவட்டத்திற்கு செல்கிறார்களோ, அங்குள்ள முக்கிய நிர்வாகிகளை, கட்சியின் தலைமை அலுவலக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு, ஏற்பாடுகள் குறித்து பேசிவருகிறார்களாம். அதாவது, சீமான் மற்றும் அவருடன் வருபவர்கள் தங்குவதற்கு எங்கே ஏற்பாடு செய்வது? காலை, மதியம், இரவு என்னென்ன உணவு? என்ன என்பது பற்றின லிஸ்ட் தரப்பட்டுள்ளதாம்.
அந்தவகையில், காலையில் பொங்கல், இட்லி, தோசை, பூரி, முக்கியமாக சிறுதானியங்களில் தயாரிக்கும் உணவுகள். மதியம், சாதம், சாம்பார், ரசம், தயிர், 2 வகை காய்கறிகள், நாட்டுக்கோழி குழம்பு, வறுவல், சுக்கா, உப்பு கறி இவகைளில் ஒன்று இருக்க வேண்டும் என்று லிஸ்ட் தரப்பட்டுள்ளதாம்.
டிரெண்டிங்: சலசலப்புகளும், பரபரப்புகளும் இப்படி கிளம்பி கொண்டிருக்க, மற்றொருபக்கம் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரங்களும் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கின்றன.
"பிஜேபி 10 வருடம் ஆண்ட கட்சி... 22 மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சி பெரிய கட்சி... ஒரு சின்ன பையன் சீமானை பார்த்து அவன் சின்னத்தில் எதற்கு ஆட்டம் காட்டுகிறாய்? கூட்டத்தில் யாராவது ஒருவர் உன்னை எதிர்த்தால், நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய் என்று பொருள்.. ஒரு கூட்டமே உன்னை எதிர்த்தால், நீ வளர்ந்து விட்டாய் என்று பொருள்... நாங்கள் வளர்ந்து விட்டோம் அதனால் நடுங்குகிறாய். அந்த பயம் எல்லாருக்கும் இருக்கட்டும்" என்று சோஷியல் மீடியாவில் கர்ஜிக்கிறது சீமானின் குரல்..!!












Click it and Unblock the Notifications