வெளியே மதிமுக கொடி.. உள்ளே மோடி படம்.. வைகோ பங்கேற்ற கூட்டத்திற்கு வந்திருந்த கார்.. சலசலப்பு!
சென்னை: மதிமுகவின் சென்னை மண்டல செயல் வீரர்கள் கூட்டத்தில், கார் ஒன்றின் உள்பகுதியில் பிரதமர் மோடியின் புகைப்படமும், வெளியே மதிமுக கொடியும் பொருத்தப்பட்டு இருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மு.பாபு தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காரில் மோடி படம்
மதிமுகவின் சென்னை மண்டல செயல் வீரர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த மதிமுக நிர்வாகியின் கார் ஒன்றின் உள்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும், வெளியே மதிமுக கொடியும் இருந்தது. செய்தியாளர்கள் இதனை வீடியோ எடுப்பதை அறிந்து மோடியின் படத்தை அகற்றினர்.
அண்மையில் அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக இணைந்தால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் கசிந்தன. அதனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறுத்தார். துரை வைகோவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தருவது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் பாஜகவுடன் நடத்தவில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறி இருந்தார்.
வைகோ பேச்சு
நேற்று நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசுகையில், "நம்மை குறிவைத்து தாக்குகிறார்கள். நமது இயக்கம் இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள். மதிமுக காணாமல் போய்விட்டது, கரைந்து போய்விட்டது, வைகோ அரசியல் முடிந்துவிட்டது என செய்தி போடுகிறார்கள்.
சாத்தூரில் நடந்த கூட்டத்தில் 15 நிமிடம் மின்சாரம் வரவில்லை. 4 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் காற்றுக்காக வெளியே போனார்கள். அப்போது காலியான நாற்காலிகளை பார்த்து பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தார்கள். நான் பத்திரிகையாளர்களுக்கு விரோதி அல்ல. பத்திரிகையாளர்களை மிசாவில் அடைக்கலாம் என்ற கருத்தை சட்டத்தில் இருந்து அகற்றுங்கள் என கூறினேன்.
மல்லை சத்யா vs வைகோ
பத்திரிகை சுதந்திரத்திற்காக நான் பாடுபட்டவன். அரங்கம் நிறைந்தபோது ஏன் புகைப்படம் எடுக்கவில்லை எனவே அரங்கத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என கூறினேன். உடனடியாக பத்திரிகையாளர்களிடம் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தார்கள்.
மல்லை சத்யா எதிரிகள், துரோகிகளோடு நமது கட்சியை அழிக்க வேண்டும் என வெளியே போனவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார். இங்கிருந்து ஒரு கூட்டத்தை அழைத்து கொண்டு போகலாம் என திட்டமிட்டிருக்கிறார். மாமல்லபுரத்தில் படகில் சென்ற போது கடலில் படகு கவிழந்தபோது உடன் வந்த நண்பர் சத்யா தோளை பற்றிக் கொண்டேன் என உயிரை காப்பாற்றினாய் என்று நான் சொன்னேன் அப்படி சொன்னது உண்மை, 3 முறை காப்பாற்றியதாக மல்லை சத்யா கூறிய நிலையில் மற்ற 2 இடங்கள் எங்கே என்று தெரிவிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் தான் இருப்போம்
மல்லை சத்யா 2 ஆண்டுகளில் 7 முறை வெளிநாடு சென்றுள்ளார். இதுவரை எனக்கு தகவல் சொல்லவில்லை, என்னைச் சந்திக்கவும் இல்லை. மதிமுக கட்சியில் இருக்கிறேன். துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கிறேன் என அவர் அங்கு பதிவு செய்யவில்லை. திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும், திமுக வெற்றிக்கு பாடுபடுவோம் இது என் கட்டளை" எனப் பேசியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications