வருமான வரித் துறை கார் மோதி 4 மாத கர்ப்பிணி பலி.. தப்பியோடிய பெண் அதிகாரிக்கு போலீஸ் வலை
சென்னை: சென்னையில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 மாத கர்ப்பிணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
Recommended Video
சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் அசாருதீன். இவரது மனைவி கௌசிபி (26). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். கௌசிபி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
மதியம் இரண்டு மணி அளவில் மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் எடுத்து விட்டு தனது கணவர் வேலை செய்யும் , வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி மெயின் தெருவில் உள்ள துணிக் கடைக்குச் சென்றார்.
ஸ்கேன் எடுத்த கர்ப்பிணி
அங்கு ஸ்கேன் ரிப்போர்ட்டை தனது கணவரிடம் காண்பித்து விட்டு மீண்டும் அதே தெருவழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த தெரு வழியாக அதிவேகமாக வந்த கார் கௌசிபி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கௌசிபி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
காரில் இருந்து தப்பிய பெண்
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்த காரை சிறைபிடித்த போது அந்த காரில் இருந்து ஒரு பெண் இறங்கி ஓடி ஒரு ஆட்டோவில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார். அந்தப் பெண் ஓட்டி வந்த காரில் வருமானவரி அலுவலகத்திற்கு சொந்தமான கார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமங்கலம்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜமங்கலம் போலீசார் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கௌசிபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து அந்த கார் யாருடையது தப்பி ஓடிய அந்த பெண் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியாயம்
இன்று உடல் கூறாய்வு முடிந்து உடலை அவரது கணவன் அசாருதீன் பெற்று கொண்டார். அப்போது அவர் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற அந்த பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.