“ரோட்ல பிச்சைதானே எடுக்குற”.. போக்குவரத்து காவலரை தாக்கிய சம்பவம்.. காங்கிரஸ் MLA மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்குமாறு கூறிய போக்குவரத்து காவலரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ தாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நகரங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. பலரும் தீபாவளி இறுதிக்கட்ட ஷாப்பிங்கில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகே போக்குவரத்து இடையூறாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த கார் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் ராஜ்குமாருக்கு சொந்தமானது. போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த காரை போக்குவரத்து காவலர் பிரபாகரன் அங்கிருந்து எடுக்குமாறு கூறியும், காரை எடுக்க எம்எல்ஏ மறுத்துள்ளார்.
போக்குவரத்து காவலருடன் எம்எல்ஏ ராஜ்குமாா், அவரது ஆதரவாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து காவலர் பிரபாகரனை அடித்த எம்எல்ஏ ராஜகுமார், "என் காரை எடுக்க முடியாது, இங்கு தான் நிற்கும்.. ரோட்டுல பிச்சை தானே எடுக்குறீங்க" எனக் கூறிவிட்டு சாலையிலேயே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காரின் சக்கரங்களை பூட்டி போக்குவரத்து காவலர் பிரபாகரன் அபராத ரசீது வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அண்ணா சாலை போலீசார், காவல் உயர் அதிகாாிகளுக்கு தகவல் தொிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், போக்குவரத்து காவலரை தாக்கிய சம்பவத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்எல்ஏ ராஜ்குமார் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications