விடிஞ்சா தேர்தல்.. இரவோடு இரவாக பணப் பட்டுவாடா.. கட்டுக் கட்டாக எடுத்து வீசும் அரசியல் கட்சிகள்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடைசி நாள் இரவான இன்று திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சியினர் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. விடிந்தால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பணப்பட்டுவாடா தீவிரமாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தவெகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.1,000, பென்னாகரம் தொகுதியில் ரூ.300, அவிநாசி தொகுதியில் திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.2,500, கிருஷ்ணராயபுரத்தில் அதிமுகவினர் ரூ.1,000 கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை எழும்பூரில் திமுகவினர் ரூ.1,500 கொடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, கடந்த 1 மாத காலமாக அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை நடந்தது. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தொகுதியைப் பொறுத்து வாக்காளர்களுக்கு ரூபாய் 1000, ரூபாய் 2000, என ரூபாய் 5000 வரை அரசியல் கட்சியினர் வழங்குவதாகவும், சில தொகுதிகளில் தங்க காசு, மூக்குத்தி, பட்டுச்சேலை உள்ளிட்ட பரிசு பொருள்கள் விநியோகம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. உடனே ECI தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக போட்டியிடும் தொகுதிகளில், ஒரு வாக்காளருக்கு ரூ.2,000 வீதமும், கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் ரூ.1,500 வீதமும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பூத் வாரியாக வாக்காளர் பட்டிலை சரிபார்த்து கட்சியினர் பணம் வழங்குகின்றனர் எனக் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தவும், 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்பதற்காகவும் தேர்தல் ஆணையம் கடுமையாக போராடி வருகிறது. இதற்காக தேர்தல் பறக்கும் படையினர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் இதுவரை 1,262 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பல தொகுதிகளில் அரசியல் கட்சியினர் இரவு நேரங்களில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு வாக்காளர் லிஸ்டை கையில் வைத்துக்கொண்டு வீடு தேடிச் சென்று பணம் பட்டுவாடா செய்வதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் நாளை விடிந்தால் தேர்தல் என்ற சூழலில், இன்று பல்வேறு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் மக்களின் மனங்களைக் குளிர்வித்து வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.














Click it and Unblock the Notifications