கையிலிருக்கும் அணுகுண்டுகள்… செல்போன்கள்.. மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து!
சென்னை: செல்போன்கள் கையிலிருக்கும் அணுகுண்டு போல பேராபத்தானவை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட பல பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதே நேரம், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சி, கோவை, உடுமலை, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுவும், ஆபாச படங்களும் சமூகத்தை மாசுப்படுத்தும் மிகப்பெரிய பிரச்னைகள் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இணையதளங்களை முறைப்படுத்தக் கோரும் வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
செல்போனின் நன்மை, தீமை அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை கண்டித்து சென்னை, மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications