தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 8 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையத்தில் ஜில் அறிவிப்பு
கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியள்ளார். மேலடுக்கு சுழற்சியால், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தற்போது பருவமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை தொடங்கி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.
8 மாவட்டங்களில் மழை
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை ,நாகை, சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேலடுக்கு சுழற்சியால், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடலுக்குள் செல்ல வேண்டாம்
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு ,அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
புதுச்சேரி காரைக்கால்
அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் மிதமான மழையும் வட தமிழகத்திலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதிக மழை எங்கே
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக 17 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. பாபநாசம் 14 செமீ, வந்தவாசி 11 செமீ, திருபுவனம் 10 செமீ, மதுராந்தகம், மைலாடி 9 செமீ மழை பதிவாகியுள்ளது. உத்திர மேரூர் 8 செமீ, பாளையம்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர், கோவில்பட்டியில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.