சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் வரப்போகும் சூப்பர் வசதி.. அமைச்சர்கள் தந்த உறுதி
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உணவகங்களை அதிக அளவில் திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், விரைவில் அங்கு சூப்பர் வசதி வரப்போகிறது. அதனை பற்ற இப்போது பார்ப்போம்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவு பெற்றுவிட்டது. நேற்று முதல் சென்னையில் கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்தே தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படியே கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து பேருந்துகளும் சென்றன. கிளாம்பாக்கத்திற்கே அனைத்து பேருந்துகளும் வந்தன. அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று தான் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது..

பொதுமக்கள் கிளாம்பாக்கத்தில் எந்தவிதமான இடையூறும் சந்திக்கக்கூடாது என்ற நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே இறக்கிவிட்டால், ஆபத்தான முறையில் சாலையை கடக்கிறார்கள். இதனால் அவர்களை ஊரப்பாக்கம் சிக்னல், வண்டலூர் பாலம் என எங்கும் இறக்காமல் நேற்று காலை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே கொண்டு போய் இறக்கிவிட்டார்கள். அதேபோல் டவுன் பஸ்களும் டவுன் பேருந்து நிலையத்திற்கு போகாமல் நேராக உள்ளே வந்து விரைவு பேருந்து நிலையத்தின் போர்டிகோவில் ஏறி வாசலிலேயே ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்றன. டவுன் பேருந்து நிலையத்திற்கு என்று தனியாக மக்கள் போகும் நிலை இப்போது ஏற்படவில்லை. இதனிடையே கிளாம்பாக்கத்தில் உணவகங்கள், ஏடிஎம்கள், டீக்கடைகள் உள்பட பல்வேறு வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதனிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அமைச்சருமான சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், "கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அங்கு புதிய ரெயில் நிலையம் அமைக்க ரயில்வே துறைக்கு ரூ.20 கோடி அளித்திருக்கின்றோம். இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். மேலும் மக்கள் சாலையை கடக்க வசதியாக ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைமேம்பாலம் அமைத்திட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது. உணவகங்களை பொறுத்தவரை, மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அன்படி கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்பட உள்ளது..
கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொறுத்தவரை அந்த பேருந்து நிலையமானது 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இதில் மக்களுக்கு பயன்படும் கட்டமைப்புகளோ, திட்டமோ செயல்படுத்தும்போது, கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் 6 ஏக்கரில் நீரூற்று பூங்காவும், 11 ஏக்கரில் காலநிலை பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் கோயம்பேட்டிலும் பசுமை பூங்கா ஏற்படுத்தப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்தை பொறுத்தளவில் தற்போது தனியார் ஆலோசனை நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறோம். அதன் இறுதி அறிக்கை வந்தவுடன் முழுமையாக கூர்ந்து ஆய்வு செய்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய உத்தரவு பெற்று மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகுதான் எவ்வித முடிவும் எடுக்கப்படும்" என்றார்.
இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் சிவகங்கர் நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மலிவு விலை உணவகம் விரைவில் திறக்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள ஊரப்பாக்கம் சிக்னலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதுபற்றி டிரைவர் ஒருவர் கூறும் போது, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், ஜி.எஸ்.டி. சாலையை அடையும் போதுதான் அங்கு வாகன நெரிசலில் சிக்குகின்றன. எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களுக்காக சிக்னல் வைக்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. சாலையில் ஏறும் பகுதியில், அரசு விரைவு பஸ்களை நகர பஸ்கள் தாண்டிச்சென்று 'யூ டர்ன்' போட்டு செல்கின்றன. இதுவும் நெரிசலுக்கு காரணமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications