செங்கல்பட்டு என்கவுண்டர்: நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடிகள்...4 ரவுண்டு சுட்ட போலீஸ் - ஐஜி விளக்கம்
: ரவுடிகள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கியதால் அவர்களை நோக்கி காவல்துறையினர் நான்கு ரவுண்டுகள் சுட்டனர் என்று காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க முயன்ற போது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கியுள்ளனர். தற்காப்புக்காக அவர்களை நோக்கி காவல்துறையினர் நான்கு ரவுண்டுகள் சுட்டதாக வடக்கு மண்டல ஐஜி விளக்கம் அளித்துள்ளார்.
இரட்டைக் கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற என்கவுண்டர் காஞ்சிபுரம் டிஐஜி சத்தியபிரியா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு, சின்னநத்தம், கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு கார்த்திக், இவர் வழக்கு ஒன்றில் ஆஜராக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்துக்கு வந்தார்.
காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு பக்கத்தில் இருந்த டீ கடை ஒன்றில் டீ குடிக்கப் போனார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கார்த்திக் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் ஒரு நாட்டு வெடிகுண்டு அப்பு கார்த்திக் மீது விழுந்து வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன் பின்னர் நாட்டு வெடிகுண்டு வீசிய மூவரும் செங்கல்பட்டு, ரேடியோ நகர் மேட்டுத் தெரு பகுதிக்குச் சென்றனர். அங்கு அப்பு கார்த்திக்கின் உறவினர் மகேஷ் என்பவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

5 தனிப்படை அமைப்பு
இந்தக் கொலைகளைச் செய்து விட்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நிகழ்ந்த கொலை பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

சுற்றி வளைத்த போலீஸ்
இந்தக் கொலையில் திருப்புலிவனம் பகுதியைச் சேர்ந்த மாதவன்,27, செங்கல்பட்டு தினேஷ்,22, பி.வி.கொளத்தூர் பிஸ்கட் என்கிற முகமது மொய்தீன்,27 ஆகிய 3 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர்களில் தினேஷ், மொய்தீன் ஆகியோரை செங்கல்பட்டு அருகே இருகுன்றப்பள்ளி என்ற இடத்தில் மறைந்து இருப்பது தெரிய வந்தது.

போலீஸ் என்கவுண்டர்
காவல்துறையினர் சுற்றி வளைத்த போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி காவல்துறையினரை தாக்கினர். இதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். காவல்துறையினர் தற்காப்புக்காக ரவுடிகளை நோக்கி சுட்டனர். இந்த மோதல் சம்பவத்தில் தினேஷ், மொய்தீன் உயிரிழந்தனர். மாதவன் திருப்புலிவனம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன் விரோதத்தால் கொலை
இந்தக் கொலைக்கான பின்னணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் டிஐஜி சத்தியபிரியா, "அப்பு கார்த்திக்கின் நண்பர் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும், தினேஷின் தங்கை பவித்ராவுக்கும் காதல் இருந்தது. இதனை தினேஷ் எதிர்த்துள்ளார். அப்பு கார்த்திக், அவரது உறவினர் மகேஷ் இருவரும் ஹரிகிருஷ்ணனுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் ஒரு வழக்கு உள்ளது. இந்த முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது என்று கூறினார்.

2 போலீசார் காயம்
என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்கள் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சுரேஷ்குமார், பரத்குமார் ஆகிய காவலர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து காயமடைந்த காவல்துறையினரை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார். சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகளின் உடற்கூறு ஆய்வையும் பார்வையிட்டார்.

ஐஜி விளக்கம்
செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார், ''அப்பு கார்த்திக், மகேஷ் என்ற இருவரில் ஒருவரை நாட்டு வெடிகுண்டு வீசியும், மற்றொருவரைக் கத்தியால் குத்தியும் மாதவன், தினேஷ், பிஸ்கட் மொய்தீன் ஆகியோர் கொலை செய்தனர். இது தொடர்பாக இருகுன்றப்பள்ளி என்ற இடத்தில் பதுங்கியிருந்தவர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது இவர்கள் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் தாக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரவிக்குமார் 4 ரவுண்டுகள் சுட்டதில் தினேஷ், பிஸ்கட் மொய்தீன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாதவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications