கதறிய தாய்..கண்டுகொள்ளாத டிரெய்னர்! சென்னையில் வாய் பேச முடியாத சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி
சென்னை: சென்னையில் நீச்சல் பயிற்சிக்குச் சென்ற வாய் பேச முடியாத சிறுவன் நீச்சல் குளத்திலேயே தத்தளித்து உயிரிழந்துள்ளார். அங்கே காப்பாற்ற வேண்டிய பயிற்சியாளரோ.. தாய் கதறிய போதும் சிறுவனைக் காப்பாற்றாமல் இருந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சில நேரங்களில் அலட்சியத்தால் உயிர் போகும் சம்பவங்கள் கூட நடக்கும். அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது நமது தலைநகர் சென்னையில் நடந்துள்ளது.

இங்கே பயிற்சியாளரின் அலட்சியத்தால் வாய் பேச முடியாத 10 வயதே ஆன சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
சிறுவன்: சென்னை கொளத்தூரை அடுத்துள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னகுமார். இவரது மனைவி பெயர் ராணி.. இந்த தம்பதியின் மகன் தான் கீர்த்தி சபரீஸ்கர் (10).. சிறப்புக் குழந்தையான சபரீஸ்கரால் வாய் பேச முடியாது. இதற்காகச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவர் ஆலோசனையின்படி சபரீஸ்கருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பெரியார் நகரில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் அந்த சிறுவன் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போதும் பெற்றோரின் மேற்பார்வையிலேயே சபரீஸ்கர் நீச்சல் பயிற்சி எடுத்துக் கொள்வார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலையும் சிறுவன் தனது பெற்றோருடன் பயிற்சிக்குச் சென்றுள்ளான். சிறுவன் தந்தைக்கு அலுவல் பணி இருந்ததால் அவர் காரிலேயே அமர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
கதறிய தாய்: சபரீஸ்கர் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள, அதை அருகே இருந்த அவரது தாய் ராணி கவனித்து வந்துள்ளார். அப்போது ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் நீரில் தத்தளித்துள்ளார். இதைக் கண்ட தாய் ராணி அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், உடனடியாக பயிற்சியாளரிடம் இதைத் தெரிவித்துள்ளார். சிறுவனைக் காப்பாற்ற வேண்டிய அந்த பயிற்சியாளர் அலட்சியம் காட்டி இருக்கிறார்.
அலட்சியம்: தாய் ராணியிடம். "நீங்க அமைதியாக இருங்க.. இதுபோன்ற கஷ்டங்களைத் தாண்டினால் தான் நீச்சல் பழக முடியும்.. சபரீஸ்கர் தானாக நீச்சல் பழகி மேலே வருவார் பாருங்க" என்று கூறியிருக்கிறார்.. இந்த பதிலைக் கேட்ட ராணி பதறிப்போனார். நீச்சல் குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த சபரீஸ்கரை காப்பாற்ற அந்த பயிற்சியாளர் எதுவும் செய்யவில்லை.
இதற்கிடையே சில நொடிகளிலேயே சபரீஸ்கர் பேச்சு மூச்சு இல்லாமல் நீச்சல் குளத்திலேயே மயங்கி உள்ளார். இதைப் பார்த்துக் கதறிய ராணி உடனடியாக வெளியே ஓடிச் சென்று தனது கணவரை அழைத்து வந்துள்ளார். நீச்சல் குளத்தில் சடலமாக மிதந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
வழக்குப்பதிவு: இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொளத்தூர் போலீசார் சிறுவனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பயிற்சியாளரின் அலட்சியமே தங்கள் குழந்தையின் மரணத்திற்குக் காரணம் என்று சபரீஸ்கரின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications