சென்னையில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் பாஜக நிர்வாகி.. கோடிகளில் நிலம்.. ஒரு நகலில் மாறிய வாழ்க்கை
சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வசிப்பவர் ஜோசப் ராஜ்.இவர் வக்கீல் ஆவார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடத்தை வாங்கி உள்ளார். அங்கிருந்து பழமையான கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்தார். அதில் ஒரு கடையை மாவட்ட மகளிர் அணியில் செயலாளரான சாமுண்டீஸ்வரி நடத்தி வந்தாராம். இவர் கடையை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயன்றாராம்.இந்த புகாரில் பாஜக மகளிர் அணி செயலாளர் சாமுண்டீஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் நிலத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் செல்கிறது. வாழ்நாள் முழுக்க சம்பாதித்தாலும் சென்னையில் நிலம் வாங்கி வீடு கட்டுவது என்பது சாமானிய மக்களால் முடியாது. லட்சங்களில் சம்பளம் வாங்கினால் கூட அடுக்குமாடி வீடுகள் தான் சென்னைக்குள் வாங்க முடியும். தனி வீடு கட்ட வேண்டும் என்றால் கோடிகளை கொட்ட வேண்டியதிருக்கும். ஏனெனில் அந்தஅளவிற்கு ரியல் எஸ்டேட் மதிப்பு விண்ணை தொட்டுவிட்டது.

போலி ஆவணங்கள்
இதன் காரணமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்பது, போலி ஆவணங்கள் மூலம் பிறரது நிலங்களை ஆக்கிரமிப்பது இங்கு அவ்வப்போது நடக்கிறது. நிலம் வாங்கிப்போட்டவர்கள் கவனமாக இல்லாவிட்டால் எளிதாக பிறர் உங்கள் சொத்துக்கு உரிமை கொண்டாடுவார்கள்.. அந்த அளவிற்கு தான் நிலைமை இருக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
பழைய கட்டிடம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் என்பவர் வக்கீலாக இருக்கிறார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடத்தை வாங்கியிருக்கிறார். அவர் வாங்கிய கட்டிடம் 100 ஆண்டு பழமையான கட்டிடம் என்பதனால் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு விரும்பினார். இதற்காக ஏற்கனவே செயல்பட்டு வந்த 5 கடைகளை காலி செய்யும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சாமுண்டீஸ்வரி செய்த வேலை
அந்த 5 கடைகளில் ஒரு கடையில் சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவர் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் பாஜக கட்சியில் மாவட்ட மகளிர் அணியில் செயலாளராக உள்ளார். இவர் கடையை காலி செய்ய மறுப்பு தெரிவித்து வக்கீல் ஜோசப் ராஜிடம் தகராறு செய்து வந்தாராம், சாமுண்டீஸ்வரி தாமாகவே கடையை இடித்துவிட்டு விரிவாக்கம் செய்து கடையை நடத்தி வந்தாராம்.
காவல் நிலையத்தில் புகார்
இதுகுறித்து ஜோசப் ராஜ் சென்னை புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த புகார் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி கடை நடத்தி வந்திருக்கிறார். இதனால் ஜோசப் ராஜ் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் போலி அரசு ஆவணங்களை தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக சாமுண்டீஸ்வரி மீது சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சொத்து வரி நகல்
இந்த வழக்கின் விசாரணையின் போது, சாமுண்டீஸ்வரி தனது கடையில் ஜெராக்ஸ் எடுக்க வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த தாமஸ் என்பவரின் சொத்து வரி ரசீதை கணினி மூலம் பெயர் மாற்றம் செய்து வாடகையில் இருக்கும் இடத்தின் சொத்து வரியை தனது பேருக்கு மாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பாரதி என்பவரது சொத்து பத்திரத்தில் அவரது மனைவி பெயரை அழித்துவிட்டு சாமுண்டீஸ்வரி தனது பெயரை மாற்றி மோசடி செய்தது தெரிந்தது. மேலும் ஜோசப் ராஜ் பெயரில் உள்ள மின் இணைப்பில் அவரது பெயருக்கு மாற்றி சாமுண்டீஸ்வரி போலியான பத்திரம் ஆவணங்களை தயாரித்து மோசடி செய்தது உறுதியானது.
சிறையில் அடைப்பு
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், பிறரை ஏமாற்றி சொத்தை அபகரித்தல், கணினி மூலம் அரசு ஆவணங்களை உருவாக்குதல் ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சாமுண்டீஸ்வரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications