முடிவுக்கு வந்த பஸ் ஓட்டுநர்கள் போராட்டம்.. சென்னை போலீஸிடம் இருந்து வந்த முக்கிய அறிவுறுத்தல்
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகரில் திடீரென பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், சென்னை போலீசார் இது குறித்து முக்கிய தகவலை ட்வீட் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பல லட்சம் மக்கள் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இங்கே இருக்கும் வலுவான ஒரு பேருந்து உட்கட்டமைப்பே இதற்கு முக்கிய காரணமாகும்.
ஏற்கனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து சாதாரண மாநகர பேருந்துகளிலும் பெண்களுக்கும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் சுமார் 900 ரூபாய் வரை சேமிக்க முடிவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தமிழக மக்கள் அரசு பேருந்துகளை எந்தளவுக்குப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதையே காட்டுகிறது. அதற்கேற்ப தமிழ்நாட்டில் எங்கே நீங்கள் பேருந்து ஏறினாலும் மாவட்ட தலைநகர், மாநில தலைநகருக்குப் பேருந்துகள் இருக்கும். அந்தளவுக்கு வலுவான பேருந்து கட்டமைப்பு இருக்கிறது.
இதற்கிடையே சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பேருந்துகள் மற்றும் நடத்துநர்களுக்குப் பற்றாக்குறை இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசு பேருந்து கழகத்திற்கு ஆட்களை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும், பணிகள் நிறைவடைய சில மாதங்கள் ஆகும் எனச் சொல்லப்பட்டது. இதனால் தற்காலிகமாகத் தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமித்து இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது.
இதற்குப் போக்குவரத்துக் கழகங்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பையும் மீறி தனியார் மூலம் ஓட்டுநர்களை நியமிக்க வழிமுறைகள் இன்று தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாநகராட்சி பேருந்து ஓட்டுநர்கள் இன்று மாலை 5 மணியளவில் பேருந்துகள் இயக்க மறுத்துள்ளனர்.. கேகே நகர், கோயம்பேடு, எனப் பல பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை.
எந்தவொரு தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுக்காத நிலையில், தன்னிச்சையாக இந்தப் போராட்டத்தைப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நடத்தியுள்ளனர். சுமார் 1.5 மணி நேரத்திற்கும் மேலாக மிகக் குறைந்த அளவுக்கே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். இன்று வேலை நாள் என்பதால் மாலை நேரத்தில் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

இது குறித்து அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. அதன் பின்னரே பேருந்துகளை மீண்டும் இயக்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சம்மதித்தனர். அதைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகரில் பேருந்துகள் மெல்ல வழக்கம் போல இயக்கப்பட்டன. இருப்பினும், சுமார் 1.5 மணி நேரம் பேருந்துகள் இயக்கப்படாததால் பல பேருந்துகளில் கூட்டம் நிரம்பியே வழிகிறது.
இதற்கிடையே சென்னை மாநகர போலீசார் பஸ் வேலை நிறுத்த போராட்டம் நடந்த நிலையில், அது குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் ட்விட்டரில், "உங்கள் கவனத்திற்கு.. சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் பிற அரசுப் போக்குவரத்துத் துறை பேருந்துகள் தற்காலிகமாக இயக்கப்படாமல் இருந்தது.
இதனால் பொதுமக்கள் அவரவர் சேருமிடத்திற்குச் செல்ல உதவுமாறும், விதிகளுக்கு உட்பட்டு பயணிகளிடம் கட்டணங்களை வசூலிக்குமாறும் அனைத்து ஆட்டோ/ ஷேர் ஆட்டோ / டாக்ஸி மற்றும் கால் டாக்ஸி / மேக்ஸி கேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications