குட் நியூஸ் ! இன்று முதல் சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே வந்தே பாரத் வாராந்திர ரயில் இயக்கம்!
சென்னை: சென்னை சென்ட்ரல்- மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று 3 ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06037) அதே நாள் மதியம் 12.20 மணிக்கு மைசூர் சென்றடையும்.

அது போல் அதே தேதிகளில் மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் (06038) அதே நாள் இரவு 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதே போல் வரும் 7ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு கோட்டயம் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06091) மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக வரும் 8ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி கோட்டயத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06092) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில்தான் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் வேகம் அதிகம் என்பதால் அதில் பயணம் செய்யும் போது பயண நேரம் குறையும் என்பதால் பொதுமக்கள் விரைவு ரயிலை காட்டிலும் கட்டணம் அதிகமாக இருந்தாலும் இந்த ரயிலை விரும்புகிறார்கள்.
சென்னை சென்ட்ரல்- கோவை, சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ஆகிய 4 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இந்த 4 ரயில்களிலும் கடந்த அக்டோபர், நவம்பர் மாதம் 3.34 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications