சென்னை எழும்பூர் - கடற்கரை இடையிலான 4-வது ரயில் பாதை எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையில் 2 பாதையில் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த வழித்தடத்தில் கூடுதலாக ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டது. அந்த ரயில் பாதையில் கடந்த மார்ச் மாதம் சோதனை ஓட்டமும் நடந்து முடிந்தது. ஆனால் இன்று வரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சென்னையில் எழும்பூர் - தாம்பரம் இடையே நான்கு ரயில் பாதைகள் உள்ளன. இதுதவிர சேத்துப்பட்டு, மாம்பலம் , கிண்டி உள்பட சில ரயில் நிலையங்களில் கூடுதல் பாதைகள் உள்ளன. இதனால் எளிதாக மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகின்றன, ஆனால் எழும்பூர் மற்றும் கடற்கரை இடையே 2 பாதையில் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

பணிகள் தொடக்கம்
இதன் காரணமாக வடமாநிலங்களுக்கு போதிய ரயில்களை இயக்க முடியாத நிலை இருந்தது. அத்துடன் தென்மாவட்டங்களுக்கும் கூடுதல் ரயில்களை எழும்பூரில் இருந்து இயக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் ரூ.275 கோடியில் 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது.
எழும்பூர் கடற்கரை நான்காவது பாதை
மொத்தம் 4 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. 2024-ம் ஆண்டுக்குள் இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. ரிசர்வ் வங்கி அருகே உள்ள நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க இயலவில்லை.. இதனிடையே, வேளச்சேரி- கடற்கரை ரயில்கள் சித்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தப்பட்டன. அந்த வழித்தடத்தில் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகினர். மக்களின் கோரிக்கையை ஏற்று ரயில் பாதை அமைப்பதற்கு தேவையான நிலம் பெறப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்தது கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் முழுமையாக முடிவடைந்தது. மார்ச் மாதம் தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழுவினர் 4-வது பாதையில் ரயிலை இயக்கி சோதித்தனர்.
சோதனை ஓட்டம்
தொடர்ந்து சோதனை ஓட்டம் வெற்றிபெற்றதால், மார்ச் 9-ந்தேதி, 4-வது ரயில் பாதையில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தார். எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கியும் சோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வு ரயில்வே அதிகாரிகளுக்கு திருப்தியாக இருந்துள்ளது. ஆனால் 4-வது ரயில் பாதை பணிகள் முடிந்து 5 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
4வது ரயில் பாதை பயன்பாட்டிற்கு எப்போது
எழும்பூர் மற்றும் கடற்கரை இடையே உள்ள ரயில் நிலையங்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதி பணிகளும் முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகியும், எழும்பூரில் இருந்து கடற்கரை வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லக்கூடிய ரயில்கள் 4-வது பாதையில் தெற்கு ரயில்வே ரயில்களை இயக்கவில்லை. ஏற்கனவே சென்ட்ரல் ரயில் நிலையம் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றால் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதில் காலதாமதம் ஏற்படுவது தொடர்கிறது.
பராமரிப்பு பணி
சில நேரங்களில் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளது. குறிப்பாக சொல்வது என்றால், கும்மிடிப்பூண்டி வழித்தடம் தான் பராமரிப்பு பணிகள் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பாதையை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் போது கூடுதல் ரயில்களை இயக்க முடியும். ஆனால் இந்த பாதையை பயன்பாட்டுக்கு கொண்டுவராததால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது. வடசென்னை மக்களுக்கு 4வது ரயில் பாதை பயனுள்ளதாக இருக்கும் என்பதால் உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications