சென்னை கண்டெய்னர் லாரியில் ரூ.245 கோடி தங்கம் - வைர நகைகள் பறிமுதல்.. அதிர்ந்து நிற்கும் அடையாறு
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. இந்நிலையில் தான் சென்னை அடையாறில் நேற்று அதிகாலையில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்கம் - வைர நகைகளுடன் சென்ற கண்டெய்னர் லாரி பறக்கும் படையிடம் சிக்கியது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. உரிய ஆவணங்கள் இருந்தும் கூட அந்த நகைகளை பறக்கும் படையினர் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்த நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறும் எண்ணத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்கள் வழங்கி வருகின்றன. இதனை தடுக்கும் பணியில் பறக்கும்படையினர் செயல்பட்டு வருகின்றனர்.

ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம், ரூ.10 ஆயிரத்துக்கு மேலான பரிசு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் பறக்கும்படையினர் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.245 கோடி நகைகள்
அந்த வகையில் நேற்று அதிகாலையில் சென்னை அடையாறில் 13வது மண்டல பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. லாரியை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கண்டெய்னர் பாக்ஸின் உள்ளே தங்கம், வைர நகைகள் ஏராளமாக இருந்தன. இந்த தங்கம் - வைர நகைகளின் மொத்த மதிப்பு ரூ.245 கோடியாகும். அதனை பார்த்து பறக்கும்படை அதிகாரிகள் மிரண்டு போயினர்.
டிரைவரிடம் விசாரணை
உடனடியாக லாரி ஓட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ரஞ்சித் என்பது தெரியவந்தது. மேலும் அவர் சென்னை சவுக்கார்பேட்டையில் இருந்து பல்லாவரம் பகுதியில் செயல்பட்டு வரும் லாஜிஸ்டிக் நிறுவனத்துக்கு தங்கம், வைர நகைகளை எடுத்து செல்வதாகவும், அதற்கான ஆவணங்களையும் காண்பித்தார். அதனை பறக்கும்படை அதிகாரிகள் சரிபார்த்தனர்.
ஆவணங்கள் இருந்தும் நகை பறிமுதல்
இருப்பினும் கூட ரூ.245 கோடி மதிப்பிலான தங்கம் - வைர நகைகளை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் இருந்தும் நகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது ஏன்? என்ற கேள்வி தற்போது பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது தான் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.
முன்அனுமதி பெறவில்லை
தற்போது மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட நகை, பணத்தை வாகனங்களில் எடுத்து செல்லும்போது உரிய ஆவணங்கள் மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த கண்டெய்னர் லாரி முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் அத்தகைய அனுமதியை பெறவில்லையாம். இதனால் தான் பறக்கும் படையினர் அந்த கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications