அவதூறு வழக்கு.. அமைச்சர் ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து
சென்னை: அவதூறு வழக்கு விசாரணையில் இன்று பிரபல சினிமா இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆஜரானதை அடுத்து அவருக்கு எதிரான பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர். அப்போது, பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார். போத்ரா இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார்.
இந்த வழக்கு 15-வது மாஜிஸ்திரேட்டு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.செல்வமணி ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறபித்த நீதிபதி, விசாரணையை வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.செல்வமணி நேரில் ஆஜரானார். இதையடுத்து அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறு அவருடைய வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையேற்ற நீதிபதி, பிடிவாரண்ட்டை ரத்து செய்து வழக்கை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications