ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது! நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய ஹாரீஸ் ஜெயராஜின் மனு தள்ளுபடி
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்படங்களுக்கு இசையமைத்து சேவை வழங்கியதாகக் கூறி, அதற்காக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக பிரபல இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜுக்கு, ஜி எஸ் டி இணை இயக்குனர் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை எதிர்த்து ஹாரிஷ் ஜெயராஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது படைப்புகள் முழுவதும் தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக பதிப்புரிமை வழங்கி விட்டதால் ஜி எஸ் டி வரி விதிக்க முடியாது என்பதால், இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சரவணன் அமர்வு, வரி விதிப்பது தொடர்பான நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது... சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் முறையிட முடியும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஜி எஸ் டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு ஹாரிஷ் ஜெயராஜ் பதிலளிக்கலாம் எனவும், அதில் ஆட்சேபணைகளை முன்வைக்கலாம் எனவும் அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தது.
மேலும், ஹாரிஷ் ஜெயராஜின் ஆட்சேபணைகளை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என ஜி எஸ் டி அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications