சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணனை புதிய அரசு மாற்றாதது திருப்தி.. உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை: தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகளை இடமாற்றிய போதிலும் சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ஜெ ராதாகிருஷ்ணனை பணியிடம் மாற்றாதது திருப்தி அளிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்றார். அன்றைய தினம் முதல் நாளே முதல்வரின் தனிச் செயலாளராக 4 பேர் நியமனம் செய்தார்.
இதையடுத்து தமிழக தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனை இடமாற்றியுள்ளார்கள். பின்னர் சென்னை காவல் துறை ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

ஐபிஎஸ் அதிகாரிகள்
அது போல் முக்கிய துறைக்கான ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார்.

உயரதிகாரிகள்
இதைத் தொடர்ந்து இன்றைய தினம் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆக்ஸிஜன் தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற விசாரணை நடத்தியது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறுகையில் புதிய அரசு பொறுப்பேற்று பல்வேறு உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.

சுகாதாரத் துறை
ஆனால் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை இடமாற்றாமல் கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்வது திருப்தி அளிக்கிறது என அந்த அமர்வு பாராட்டியது. ஜெயலலிதா ஆட்சியின் போது சுகாதாரத் துறை செயலாளராக இருந்தவர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடமாற்றப்பட்டு இவருக்கு பதில் பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டார்.

செவ்வனே செய்யும் அதிகாரி
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனாவின் தாக்கம் மே, ஜூன் மாதங்களில் தமிழகத்தில் உச்சம் பெற்றதால் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் ஜூன் 2020 இல் நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை கொரோனா தடுப்பு பணிகளை செவ்வனே செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications