ஆதீன மடங்களின் சொத்துகள்.. 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாத காலத்துக்குள் அகற்ற வேண்டும் என அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலரான ஏ.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குன்றத்தில் உள்ள செங்கோல் ஆதீன மடத்துக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ளன. இந்த சொத்துகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால், அவற்றை மீட்க அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த ஆதீன மடம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களுக்கும் சொந்தமான சொத்துகளின் தற்போதைய நிலை குறித்த அறிய இந்த வழக்கில் அனைத்து ஆதீன மடங்களையும், அதன் மடாதிபதிகளையும் வழக்கில் சேர்க்க உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆதீன மடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வார காலத்துக்குள் அகற்ற வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications