பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கிடையாது
சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்துமாறு பெண் வழக்கறிஞர்கள் செய்திருந்த முறையீட்டினை நிராகரித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மிரட்டல்கள் தொடர்பாக திருநாவுக்கரசு உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆவேசத்தால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு.
இதுவரை சிபிஐ விசாரணையை துவங்காத நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, சிபிசிஐடி விசாரணையை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் இணைந்து, இதுதொடர்பாக இன்று ஒரு மனுத் தாக்கல் செய்தனர். அதில், உயர் நீதிமன்ற மேற்பார்வையில், சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஆனால், தமிழக அரசு ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துவிட்டதால், இதில் உயர் நீதிமன்றம் இனியும் தலையிடாது என்று கூறிய நீதிமன்றம், பெண் வழக்கறிஞர்கள் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.