சென்னையில் LPG தட்டுப்பாடு.. ஆட்டோ கட்டணங்கள் திடீர் உயர்வு.. பொதுமக்கள் அவதி
சென்னையில் தொடர்ந்து நிலவும் எல்பிஜி தட்டுப்பாடு இப்போது ஹோட்டல்களை தாண்டி ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களையும் நேரடியாக பாதிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே சென்னையில் பல தள்ளுவண்டி கடைகள் வர்த்தக எல்பிஜி சப்ளை இல்லாத காரணத்தால் கடைகளை மூடியுள்ளது. பெரிய ஹோட்டல்களில் மெனுக்களில் பல உணவுகள் வழங்கப்படுவது இல்லை. இந்த நிலையில் தற்போது ஆட்டோ சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா ஈரான் மீதான போர் நிறுத்தத்தை காலவரையற்ற வகையில் நீட்டித்தாலும், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரான் ராணுவம் ஹார்முஸ் நுழைவு வாயிலில் போக்குவரத்தை முடக்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக ஹார்முஸ் முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக வளைகுடா நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை மொத்தமாக முடங்கி, இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

சென்னையில் ஆட்டோ எல்பிஜி சப்ளை குறைந்துள்ள காரணத்தால், ஆட்டோக்கள் சாலையில் குறைவாகக் காணப்படுகிறது. இதனால் சென்னையில் பல முக்கிய இடத்திலும் மக்கள் ஆட்டோவுக்காக காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளது. மேலும் ஆப் அடிப்படையிலான பயண சேவைகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் குறுகிய தூர பயணங்களைக்கூட பெரும் நெருக்கடியாக சென்னை மக்களுக்கு மாற்றியுள்ளது.
எல்பிஜி விலை வேறுபாடு
ஆட்டோக்களுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி எரிவாயுவின் விலையில் சென்னையில் பெரும் வேறுபாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சில எரிபொருள் நிலையங்களில் மட்டுமே ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் எல்பிஜி கிடைக்கிறது. இதனால் அந்த நிலையங்களில் ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
மற்ற ஆட்டோ எல்பிஜி நிலையங்களில் விலை அதிகமாக இருப்பதால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் வாகனத்தை வீட்டில் வைத்திருக்கின்றனர் எனவும் ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகின்றனர். இதனால் பிக் நேரத்தில் ஆட்டோக்கள் மிகவும் குறைவாகக் கிடைக்கின்றன.
கட்டண உயர்வு
இந்த எரிபொருள் தட்டுப்பாட்டின் தாக்கம் மக்கள் கட்டணம் வாயிலாக எதிர்கொள்ள துவங்கியுள்ளனர். முன்பு குறுகிய தூர பயணத்திற்கு 100 முதல் 120 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 180 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது தினசரி அலுவலகம் செல்லும் மக்கள், மாணவர்கள் மற்றும் மிடில் கிளாஸ் குடும்பத்தினருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்களின் சவால்கள்
ஆட்டோ ஓட்டுநர்கள் எரிபொருள் விலை உயர்வு, எரிபொருளை பல மணிநேரம் காத்திருந்து பெறும் நிலை ஆகியவற்றை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். மேலும் எரிவாயு நிலையங்களில் எல்பிஜி நிரப்ப ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் வரை ஆகிறது. இதனால் இக்காலக்கட்டத்தில் சவாரி எடுக்க முடியாத நிலை எற்படுவதாக கூறுகின்றனர்.
தனியார் நிலையங்களில் விரைவாக நிரப்ப முடியும் என்றாலும் விலை அதிகமாக இருப்பதால் லாபம் குறைகிறது. இதனால் பல ஓட்டுநர்கள் பயணங்களை குறைத்துக் கொள்ளவோ அல்லது வாகனத்தை முழுவதுமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த பிரச்சனையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் பெரிய நகரங்களில் விநியோகத்தை அதிகரித்துள்ளன. ஆனால் விநியோகத்தில் உள்ள சிக்கல் மற்றும் விலை வேறுபாடு காரணமாக மக்கள் மத்தியில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் எல்பிஜி விநியோகம் பெரும்பாலும் சீராக உள்ளது என்று தெரிவிக்கின்றனர். ஆனால் நாட்டின் சில பகுதிகளில் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.











Click it and Unblock the Notifications