ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ட்ரோன் தாக்குதல்! முட்டாள்தனமான செயல் என டிரம்ப் கொந்தளிப்பு!
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நான்கு தற்கொலைப்படை ட்ரோன்களை ஏவியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியதற்கு இன்னும் எந்த ஆதராங்களும் வெளியாகவில்லை. இப்படி இருக்கையில், போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டிருக்கிறது என்று டிரம்ப் கூறியிருப்பது, சர்வதேச அளவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரான் ஏவிய 4 ட்ரோன்களில் ஒன்று, ஒரு பெரிய மற்றும் விலை உயர்ந்த சரக்குக் கப்பலின் மேல் தளத்தில் பலமாக மோதியது. இதில் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டாலும், அது தொடர்ந்து தனது பயணத்தைத் தொடர்ந்தது. மற்ற 3 ட்ரோன்களை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தின” என்று டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், “நிச்சயமாக இது எங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தை முட்டாள்தனமாக மீறும் செயலாகும்” என்றும் அவர் ஈரானைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
போர் நிறுத்தம்
கடந்த ஜூன் 17-ம் தேதி அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே 60 நாள் போர்நிறுத்த நீட்டிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வணிகக் கப்பல் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள கப்பல்களை வெளியேற்றும் பணியைச் சர்வதேச கடல்சார் அமைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்தத் தாக்குதல் ஓமன் கடற்கரைக்கு அருகே நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட கப்பல் சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தியாவுக்கு சிக்கல்
பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறை இன்னும் அதிக நாட்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்ககெனவே எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருக்கின்றன. இப்படி இருக்கையில், பதற்றம் குறையவில்லை எனில், இந்தியர்களுக்குதான் சிக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications