சுள்ளுன்னு அடித்த வெயிலுக்கு இதமாக ஜில்லுன்னு பெய்த ஆலங்கட்டி மழை..4 மாவட்டங்களில் நீடிக்குமாம்!
சென்னையில் வெயில் சுட்டெரித்த நிலையில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 4 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் காலையில் மிதமாக பெய்த மழை தற்போது கனமழையாக மாறியுள்ளது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியிலேயே தமிழ்நாடு முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்பம் சுட்டெரித்த நிலையில் வெப்ப அலை வீசக்கூடும் என மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கினர். இந்த நிலையில் கோடையை குளிர்விக்கும் வகையில் நேற்றிரவு தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இன்று காலையில் சென்னையின் பல பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. காலை 11 மணி அளவில், மீண்டும் சென்னையிலுள்ள அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், கொளத்தூர், பாடி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால், சாலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் வில்லிவாக்கம் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வேளச்சேரி பகுதியில் சாரல் மழையாக தொடங்கி கனமழையாக மாறியது. திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில தினங்களாக கோடை வெப்பத்தில் தவித்த மக்களுக்கு திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
இதனிடையே தமிழ்நாடு புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications