அடுத்த ரவுண்ட் ஆரம்பம்! வரும் நாட்களில் தமிழகத்திற்கு நல்ல மழை! அதிகாலையில் உறை பனி- வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், சில காலமாக மழை பெரியளவில்லை இல்லாமல் இருந்தது. இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தில் மிதமான மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக். மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை மாநிலத்திற்குச் சிறப்பான மழையைக் கொடுத்தது..
இதனால் மாநிலத்தில் இருக்கும் பல நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போகு, மாநிலத்தில் இயல்பைக் காட்டிலும் ஓரளவுக்கு நல்ல மழையே கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மழை
இதனால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ள நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜன.22) தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

வரும நாட்களில் வானிலை எப்படி
நாளை (ஜன.23) தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. அதேபோல நாளை மறுநாள் (ஜன.24 ) தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னை
வரும் ஜன.25 மற்றும் ஜன. 26 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தலைநகர் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்த வரையில் மழை அளவு ஏதும் பதிவாகவில்லை. இன்றும், நாளையும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications