சென்னையின் பிஸியான பெரம்பூருக்கு கீழே.. 861 மீட்டர் தூரத்திற்கு.. சத்தமே இன்றி நடந்த தரமான சம்பவம்
சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மேலகிரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் மேலகிரி அயனாவரம் நிலையத்திலிருந்து பெரம்பூர் நிலையம் வரையிலான (down line) 861 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணியை முடித்து பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது.

இது Tata Projects நிறுவனத்தின் TU02 ஒப்பந்தப் பிரிவில் எட்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தனது இரண்டாம் கட்டத் திட்டத்தில் இதுவரை மொத்தம் 19 சுரங்கம் தோண்டும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சென்னை மெட்ரோ
சுரங்கம் தோண்டும் இயந்திரம் மேலகிரி, பெரம்பூர் இரயில் நிலைய தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகளுக்கு அடியில், அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் நெருக்கமான கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தது. சுரங்கப்பாதை அமையும் வழியில் இருந்த 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் (Bore wells) முறையாகக் கையாளப்பட்டன. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், அக்கிணறுகளுக்குப் பதிலாக மாற்று நீர் ஆதாரங்கள் மெட்ரோ நிர்வாகத்தால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Tata Projects நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) இறுதி செய்யும் முனையில் உள்ளது. இந்த 21.5 கிலோமீட்டர் நீள வழித்தடத்தில் 19 நிலையங்கள் அமையவுள்ளன.
இது தொடர்பாக சிஎம்ஆர்எல் அதிகாரிகள், அறிக்கை இறுதிக்கட்டமாக உள்ளதாகவும், அடுத்த இரு வாரங்களுக்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தனர். இதன் தயாரிப்பு ஒப்பந்தம், கடந்த ஆகஸ்டில் சிஸ்ட்ரா எம்விஏ கன்சல்டிங் நிறுவனத்திற்கு ₹96.19 லட்சத்திற்கு வழங்கப்பட்டது.
தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி
DPR முடிந்ததும், சிஎம்ஆர்எல் அதை தமிழக, மத்திய அரசுகளின் ஒப்புதல் மற்றும் நிதிக்கு அனுப்பும். "கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகும்," என ஒரு சிஎம்ஆர்எல் அதிகாரி கூறினார். இம்மெட்ரோ வழித்தடம் தாம்பரம், கிண்டி, வேளச்சேரி பகுதி கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்களை இணைப்பதால், பொதுமக்களுக்கும் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டிற்கும் (TOD) மிக முக்கியமானது.
ஒரு மூத்த சிஎம்ஆர்எல் அதிகாரி, "21.5 கி.மீ. வழித்தட நிலையங்கள், அதிகபட்ச பயணிகள் போக்குவரத்து (PHPD) உள்ள முக்கிய இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன. கிண்டியை இணைப்பது அதை பிரம்மாண்ட போக்குவரத்து மற்றும் வணிக மையமாக மாற்றும்" என்றார். இத்திட்ட நிலையங்களில் மேடவாக்கம், வழித்தடம் 5 (மாதவரம்-சோழிங்கநல்லூர்) இணைப்பு, பல்லிக்கரணை காமாட்சி மெமோரியல் மருத்துவமனை, வேளச்சேரி குருநானக் கல்லூரி சந்திப்புகள் மற்றும் வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும்.
மார்ச் 2024 பணிகளில், தாம்பரம்-வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் (MRTS) பயணத் தேவையை சிஎம்ஆர்எல் மறுமதிப்பீடு செய்தது. கிண்டி அல்லது லிட்டில் மவுண்ட் வரை நீட்டிக்க முதலில் மதிப்பிடப்பட்டது. எனினும், கிண்டியின் வளர்ச்சி, இ.எம்.யு. (EMU) சேவைகள், சிஎம்ஆர்எல்-இன் பல்நோக்கு மையத் திட்டங்களை கருதி, அதிகாரிகள் லிட்டில் மவுண்டிற்குப் பதிலாக கிண்டியை நீட்டிக்க முடிவு செய்தனர்.
மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள்
₹63,246 கோடியில் கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிட்டத்தட்ட 40% பணிகள் நிறைவடைந்துள்ளது. 118.9 கி.மீ., தூரத்திற்கு இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கிமீ தூரம் 2025 டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. 50.5 கிமீ சுரங்கப்பாதையில் 19 கிமீ சுரங்கப்பாதை மட்டுமே தற்போது முடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications