மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 34 கிலோ நகைகள் உருக்கம்.. சென்னையில் சுத்த தங்கமாக மாறும் பழைய நகை
சென்னை: கோயில்களில் உள்ள பழைமையான நகைகளை பாதுகாக்கவும், பயன்பாடற்றவற்றை முறையாக உருக்கிப் புதிய ஆபரணங்களாக மாற்றவும் அறநிலையத்துறை தெளிவான விதிமுறைகளைப் பின்பற்றுகிறது.. இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பயன்பாடற்ற நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்ற வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, கோயில்களில் உள்ள பழமையான மற்றும் பயன்பாட்டில் இல்லாத நகைகளை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத் துறை தெளிவான நடைமுறைகளை பின்பற்றுகிறது.

கோயிலின் நிர்வாகம் மற்றும் நகையின் நிலைக்கேற்ப ஆபரணங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.. தினசரி மற்றும் திருவிழாக்களுக்குப் பயன்படும் நகைகள் பராமரிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுகின்றன. இது கோயில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும்.
தங்க ஆபரணங்கள்
பழுதுபார்க்க முடியாத அளவிற்கு சேதமடைந்த நகைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, உருக்கிப் புதிய ஆபரணங்களாக மாற்றப்படுகின்றன. இந்தச் செயல்முறை வெளிப்படையாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பிட்டாளர்கள் கொண்டு தரம் மற்றும் எடை கணக்கிடப்பட்டு, பதிவேடுகளில் துல்லியமாகப் பதியப்படும்.. நகை உருக்கப்படும் பணி வீடியோ பதிவு செய்யப்பட்டு, முறைகேடுகள் தவிர்க்கப்படுகின்றன..
வரலாற்று சிறப்புமிக்க நகைகள் உருக்கப்படாமல், பாதுகாப்பு அறைகளில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. அருங்காட்சியகங்களில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. சுருக்கமாக, நகைகள் அனைத்தும் கோயிலின் சொத்துக்களாகக் கருதப்பட்டு, பழுதுபார்த்தல், உருக்கிப் புதிய ஆபரணமாக்கல் அல்லது வரலாற்று ஆவணங்களாகப் பாதுகாத்தல் என முறையாக நிர்வகிக்கப்படுகின்றன.
தங்கக் கட்டிகள்
இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பயன்பாடற்ற 34 கிலோ நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்ற வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது...
சென்னை, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறப்பட்டு பயன்படுத்த இயலாத பொன் இனங்களில் கல், அரக்கு, அழுக்கு நீக்கப்பட்டு, மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டு வருகிறது..
பயன்பாடற்ற தங்க நகைகள்
இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திர பாபு, செல்வி மாலா ஆகியோரின் கண்காணிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், இதுவரை 21 கோயில்களின் பயன்பாடற்ற தங்க நகைகளை உருக்கி கிடைக்கப் பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் தங்கக் கட்டிகள் எஸ்பிஐ-யின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் அந்தந்த கோயிலின் பெயரில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.17 கோடியே 76 லட்சத்து 85000 வட்டி கிடைத்து வருகிறது.. இந்த தொகை அந்தந்த கோயிலின் வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது..
பயன்படுத்தாத பழைய நகைகள்
இதன் தொடர்ச்சியாக நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு முன்னிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைப்பெற்று, பயன்படுத்தப்படாத 34 கிலோ 375 கிராம் எடையுள்ள தங்க நகைகளை உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்ற எஸ்பிஐ-யிடம் ஒப்படைத்தார்..
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்கள் இரா.வான்மதி, பெ.க.கவெனிதா, எஸ்பிஐ சென்னை மத்திய மண்டல மேலாளர் இன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..












Click it and Unblock the Notifications