மாணவிகளிடம் ‘டபுள் மீனிங்’கில் பேசி பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 2 ஆண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி!
சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்பவர், வகுப்பறையில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தங்களுடன் பேசுவது, மாணவிகளின் உடல் அமைப்பு மற்றும் அவர்கள் அணிந்து வரும் உடையை வைத்து அவர்களது நடத்தை குறித்து விமர்சிப்பது என பல்வேறு வழிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இதுதொடர்பான புகார்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அப்பள்ளியில் படித்த 8 மாணவிகள் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை வடபழனி அனைத்து மகளிர் போலீசார், ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து செல்போன், லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.
ஆசிரியர் ராஜகோபாலன் மீதான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, எட்டு மாணவிகளின் புகாருக்கும் தலா 2 ஆண்டுகள் வீதம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவித்தால் போதுமானது.
மேலும் ஒவ்வொரு மாணவியின் புகாருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.












Click it and Unblock the Notifications