லியோ ரிலீஸ்!"தீவிரமாக கண்காணிக்கும் சிறப்பு குழுக்கள்.."சென்னை போலீஸ் அதிரடி! வந்தது புது எச்சரிக்கை
சென்னை: லியோ படத்தின் சிறப்பு காட்சிகள் குறித்து தமிழக அரசு முக்கிய அராசணையை இன்று வெளியிட்ட நிலையில், இது தொடர்பாக இப்போது சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் என்று மிக பெரிய ரசிகர் பட்டாளமே நடித்துள்ளது.

இந்தத் திரைப்படம் வரும் அக். 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்ப்பட்டுள்ளது. அப்போது விடுமுறை நாட்கள் வரும் நிலையில், அக். 24ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகள் திரையிட தயாரிப்பாளர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
லியோ: இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இன்று சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. லியோ படத்தின் காட்சிகள் எப்போது ஆரம்பிக்க வேண்டும் எப்போது முடிய வேண்டும் என்பது தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையே இப்போது சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரும் இது தொடர்பாக சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "லியோ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழக வெளியிட்டுள்ள அரசாணையில் விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு காட்சிகள்: லியோ' என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசு இன்று சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி வரும் 19 முதல் 24ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் 'லியோ' படத்தை திரையிடவும், காலை 9.00 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 'லியோ' திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும் இதனைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைத்து சென்னை காவல் ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் கண்காணிக்க வேண்டுமென அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு குழுக்கள்: அதன் பேரில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், 19.10.2023 முதல் 24.10.203 வரையில் 'லியோ' திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும், திரையரங்கிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் சிறந்த முறையில் அமைத்திட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு அனுமதி அளித்துள்ளது போல் காலை 09.00 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக் கொள்ள வேண்டும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக, சென்னை காவல்துறையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்முறையில் ஈடுபட்டால்: மேலும், திரையரங்குகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications