வட மாநிலத்தை பாருங்க.. கலவரத்தை காரணம் காட்டி அண்ணாமலையின் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு! போலீஸ் அதிரடி
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை இன்று சென்னையில் நிறைவடைகிறது. இந்நிலையில் சென்னையில் யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் மைலேஜை உயர்த்திக்கொள்ள ஒவ்வொரு கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்த முறை எப்படியாவது குறைந்தது 9 எம்பிக்களை பெற்றுவிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இதற்காக இக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' எனும் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியாக அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை தற்போது நிறைவு கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி தொகுதிகளில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, அதை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசியிருந்தார்.
சமீப காலமாக பாஜகவினரின் அரசியல் முயற்சிகள் மத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கி இருப்பதாக தமிழக அரசு விமர்சித்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியின் போது சென்னை தி நகரில் உள்ள கோதண்டராம கோயிலுக்கு சென்றிருந்தார். பின்னர், x சோஷியல் மீடியாவில், நாடே ராமர் கோயில் திறப்பு கொண்டாட்டத்தில் இருக்கும் போது, கோதண்டராம கோயிலின் அர்ச்சகர்கள் முகத்தில் ஒருவித அச்ச உணர்வு இருந்ததாக கூறியிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து அடுத்த சில நிமிடங்களில் பேட்டியளித்த கோயில் அர்ச்சகர்கள், "ஆளுநர் வருகையால் சில முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது. எனவேதான் சோர்வாக இருந்தோம்" என்று கூறி, ஆளுநரின் கூற்றை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டனர். அதேபோல, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில், அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்தை காண அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த எல்இடி திரை அகற்றப்பட்டது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆனால், காவல்துறையினரிடம் கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டிருந்த கடிதத்தில் எல்இடி திரை அமைக்க அனுமதி கோரவில்லை. இந்த கடிதத்தின் நகலை போலீசார் வெளியிட்டதும், நிர்மலா சீதாராமனின் விமர்சனம் பொய் என்று நிரூபணமானது. இப்படியாக தொடர்ச்சியா மத கலவரங்களை பாஜக உண்டுபண்ண முயற்சிப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
எனவே இதனை காரணம் காட்டியும், வட மாநிலங்களில் இது போன்ற பாஜக யாத்திரையில் கலவரங்கள் வெடிப்பதாக கூறியும், இன்று சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெறவிருந்த அண்ணாமலையின் யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கும் தங்கசாலை பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications