புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை முழுவதும் போலீஸ் கையில்! நட்சத்திர ஹோட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடு
சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னை காவல்துறை சில கடும் விதிமுறைகளை அறிவித்துள்ளது. 2026ம் ஆண்டு புத்தாண்டு வரும் நிலையில், டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிமுதல், ஜனவரி 1ம் தேதி அதிகாலை 1 மணி வரையிலான நேரத்தில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளின் போது எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை கூறியுள்ளா.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் முறையாகச் சோதிக்கப்பட வேண்டும். அவை பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஹோட்டல்களில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிலும், விருந்து நடைபெறும் இடங்களிலும் கூட கேமரா அமைக்கப்பட வேண்டும்.

சென்னை காவல்துறை
மேலும், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்காக தற்காலிக மேடைகள் அமைக்கப்படுமானால், அந்த மேடைகள் பாதுகாப்பாக உள்ளனவா எனச் சரிபார்க்க வேண்டும். தீயணைப்பு துறையிடமிருந்து தேவையான சான்றுகள் பெறப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீது அல்லது அதற்கு மிக அருகில் மேடை அமைக்கக் கூடாது. அனுமதி வழங்கப்பட்ட அரங்கு உள்ளேயே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்ட விதிமுறைகள்
நீச்சல் குளத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஹோட்டலுக்கு வரும் வாகனங்கள் அந்த ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்தப்பட வேண்டும். சாலையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. மதுபானங்கள் அனுமதி வழங்கப்பட்ட இடத்திலேயே வழங்கப்பட வேண்டும். உணவு மற்றும் மதுபான சேவைகள் அதிகாலை 1 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். காவல்துறை நிர்ணயித்த நேர வரம்புகளை ஹோட்டல்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
பெண் பாதுகாவலர்கள்
நிகழ்ச்சிகளின் போது பெண்களுக்கு எந்த வித இகழ்ச்சியும் அல்லது துன்புறுத்தலும் ஏற்படாத வகையில் போதுமான பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஹோட்டல் வளாகத்துக்குள் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.
நட்சத்திர ஹோட்டல்
மேற்கண்ட கட்டுப்பாடுகளை மீறினால், சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. நட்சத்திர ஹோட்டல்களுக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை போன்ற இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
சட்ட விரோத பார்ட்டி நடவடிக்கை
புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக நகரம் முழுவதும் பெரிய அளவில் மக்கள் திரள் கூடும் வாய்ப்பு உள்ளது. எனவே, அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. குடும்பத்துடன் வரும் மக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல்கள் அனைத்தும் அவற்றை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பதே காவல்துறை சென்னை பெருநகர காவல்துறை கூறியுள்ளது. மேலும் விதிமீறல்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, சட்டவிரோத மது - போதை பார்ட்டிகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications