உள்ளே வரும் இண்டர்போல்! சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. குற்றவாளியை பிடிப்பதில் தாமதம் ஏன்
சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இதில் குற்றவாளியை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
நேற்றைய தினம் சென்னையில் திடீரென 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த தனியார்ப் பள்ளிகளுக்குக் காலை 10.30 மணியளவில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

ஒரே நேரத்தில் இத்தனை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிகள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இதையடுத்து உடனடியாக பள்ளிகளுக்கு போலீசாரும் வெடிகுண்டு வல்லுநர்களும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் அமர வைக்கப்பட்ட நிலையில், பள்ளிகளில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய்கள் வந்த நிலையில், அவை சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டன. மேலும், பள்ளிகளுக்கு வந்த மெயிலை பார்த்த போது அனைத்து இமெயிலும் ஒரே ஐடியில் இருந்து வந்ததும்.. ஒரே போன்ற தகவல்கள் இருந்ததும் தெரிய வந்தது.
பெற்றோர்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் தெரிவிக்காமல். வெறுமென பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள் என்று மட்டும் கூறப்பட்டது. அதேநேரம் செய்திகளில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில், பதறியடித்துக் கொண்டு பள்ளிகளில் கூடினர். இதனால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசலும் கூட ஏற்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்திய நிலையில், எங்கும் வெடிகுண்டுகள் கண்டறியப்படவில்லை.
புரளி: இதையடுத்து அந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாகச் சென்னை போலீசாரும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தனர். இதையடுத்து இன்று மீண்டும் பள்ளிகள் வழக்கம் போலச் செயல்படுகிறது. அதேநேரம் மிரட்டல் விடுத்த அந்த நபர் யார்.. எங்கே இருக்கிறார். எப்படிச் செயல்பட்டார் என்பதைக் கண்டறிய போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இருப்பினும், மிரட்டல் வந்த இ மெயில் முகவரி குறித்த தகவல்களை போலீசாரால் கண்டறிய முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இதேபோலத் தான் பெசன்ட் நகர் கடற்கரையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. அங்குச் சோதனை நடத்தப்பட்டத்தில் அதுவும் போலி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இதையடுத்து சென்னை போலீசார் உள் துறை அமைச்சகத்தின் உதவியுடன் இண்டர்போல் உதவியை நாட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக இது தொடர்பான தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக இண்டர்போல் அமைப்பிடம் கோர முடிவு செய்துள்ளனர். அந்த 13 பள்ளிகளுக்கும் வந்த மெயிலில் மிரட்டும் தொனியில் தகவல்கள் இல்லை.. மாறாக வெடிகுண்டு இருக்கிறது.. எனவே மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றே இருந்துள்ளது.
தாமதம் ஏன்: ஒரே மெயில் ஐடியில் இருந்து பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அந்த ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. மிரட்டல் விடுக்க வெளிநாடுகளில் உள்ள தனியார் இணையதள சேவையைப் பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்தே சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போலை நாட போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் இது தொடர்பாகப் பல பகீர் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications