சென்னையில் இனி வாகன திருட்டே நடக்காது.. நேரடியாக உயர் அதிகாரிகளுக்கு பறக்கும் அலர்ட்! செம
சென்னை: சென்னையில் வாகன திருட்டு அச்சுறுத்தலைத் தடுக்க ஒரு அட்டகாசமான தீர்வை சென்னை போலீசார் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் நீங்கள் தொலைந்து போன வாகனம் குறித்து போலீசில் புகார் அளித்தால் போதும்.. நகரில் இருக்கும் அதிநவீன கேமராக்கள் தானாகவே உங்கள் வாகனத்தைத் தேடிக் கண்டுபிடிக்க ஆரம்பித்துவிடும். இதன் மூலம் வாகன திருட்டுகளை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நமது சென்னையில் வாகன திருட்டு என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. வாகனங்களைத் திருடி விற்பது ஒரு பக்கம் என்றால்.. செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களுக்குத் திருடப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது.

போலீஸ்: உங்கள் வாகனம் தொலைந்து போய்விட்டால் நீங்கள் IVMS எனப்படும் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அதில் நீங்கள் தொலைந்து போன வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட சில அடிப்படை தரவுகளைத் தர வேண்டும். இதைச் செய்தால் போதும்.. இந்த ஐவிஎம்எஸ் அமைப்பு உங்கள் வாகனத்தைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துவிடும்.
இப்போது சென்னை முழுக்க 28 இடங்களில் 100க்கும் மேற்பட்ட தானியங்கி ANPR கேமராக்கள் இருக்கும் நிலையில், அந்த கேமராக்கள் உங்கள் வாகனத்தைத் தேட ஆரம்பித்துவிடும். இந்த இடங்களில் எதாவது ஒரு இடத்தில் உங்கள் வாகனம் கண்டறியப்பட்டால் உடனடியாக வாட்ஸ்அப் மூலம் போலீசாருக்கு தானாகவே எச்சரிக்கை அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை டிராக் செய்து கண்டுபிடிப்பார்கள்.
IVMS என்றால் என்ன: சோதனை முறையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப்போதே தினசரி ஓரிரு திருட்டு வழக்குகள் இதன் மூலம் தீர்க்கப்படுவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த IVMS என்பது கிரேட்டர் சென்னை போலீசாரால் 1.8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இணைய அடிப்படையிலான செயலியாகும். இது சென்னையில் திருடப்பட்ட வாகனங்களைக் கண்டுபிடிக்கப் பெரியளவில் உதவுகிறதாம்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மேலும் கூறுகையில், "சென்னையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கிறது. இதனால் முன்பு சென்னையில் தொலைந்து போன வாகனத்தைத் தேடுவது வைக்கோல் குவியலில் ஊசியைத் தேடுவதைப் போல இருந்தது. இதனால் வாகன திருட்டு வழக்குகளை முடிப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால், இந்த செயலி அதை எளிமையாக்கி உள்ளது" என்றார்.
எனவே, போலீசார் இதில் அதிக கவனம் கொடுக்க தொடங்கியுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சென்னையில் தொலைந்து போன 3,200 வாகனங்களின் தரவுகளை போலீசார் ஏற்கனவே இந்த IVMS செயலியில் பதிவு செய்துள்ளனர்.
எப்படி: சென்னையில் பல இடங்களில் இந்த ANPR கேமராக்கள் இருக்கும் நிலையில், திருடப்பட்ட வாகனத்தின் நம்பர் பிளேட் இந்த கேமராக்களில் ஒன்றின் மூலம் கண்டறிந்தால் உடனடியாக இந்த IVMS செயலி அதன் விவரங்களைச் சரிபார்க்கும். திருட்டு வழக்கு எப்போது பதிவு செய்யப்பட்டது, வழக்கு எண் உள்ளிட்ட தகவல்கள் உதவி கமிஷனர், துணை கமிஷனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.
இந்த ANPR கேமராக்கள் போக்குவரத்து சந்திப்புகள் உட்பட 28 முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர 50+ நகரக்கூடிய கேமராக்களும் சென்னையில் பல இடங்களில் இருக்கிறது. இந்த கேமராக்கள் வாகனம் மற்றும் அதில் பயணிப்போரின் போட்டோக்களை எடுத்து, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களையும் போலீசாருக்கு அனுப்புகிறது. இரவு நேரங்கள், மோசமான வானிலை என எந்த சூழலிலும் போட்டோக்களை இந்த கேமராக்களால் எடுக்க முடியும் என்பது மற்றொரு சிறப்பாகும். இதனால் எந்த நேரத்தில் திருடப்பட்ட வாகனங்கள் சாலையில் வந்தாலும் போலீசாருக்கு உடனடியாக அலர்ட் பறக்கும்
போலீசார் நம்பிக்கை: உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு செயின்ட் தாமஸ் மவுண்ட் போலீஸ் நிலையத்தில் தனது பஜாஜ் பல்சர் வாகனம் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த வாகனம் பாரிஸ் கார்னர் சந்திப்பைக் கடக்கும் போது இந்த IVMS முறையில் போலீசாருக்கு எச்சரிக்கை மெசேஜ் சென்றுள்ளது. இதையடுத்து சில நாட்களில் போலீசார் பைக்கைக் கண்டுபிடித்து குற்றவாளியைக் கைது செய்தார். வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் பல திருட்டு வாகனங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications