பூந்தமல்லி டூ அண்ணாசாலை.. சென்னையில் செம டிராஃபிக்.. ரூட்டே மாறுது.. இன்னைக்கு பிரதமர் மோடி வர்றாரு
சென்னை: பிரதமரின் சென்னை வருகையையொட்டி இன்று பிற்பகல் 3 மணி முதல், இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வணிக வாகனங்களுக்கான மாற்று வழிதடங்களையும் வெளியிட்டுள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னையில் இன்று தொடங்கி, 31ம் தேதி வரை நடக்க போகின்றன.. இந்த போட்டிகளில் கிட்டத்தட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க போகிறார்கள்..

இந்த பிரம்மாண்டமான 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார்.
பிரதமர் வருகை: பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. மேலும், 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. சென்னையில் உள்ள முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்..
இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, போக்குவரத்திலும் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இதுதான்:
பிரதமர் ஜனவரி 19 அன்று நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு" தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இதில் தமிழக ஆளுநர், முதல்வர், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
ராஜ்பவன்: பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும், ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வணிக வாகனங்கள்: மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை இடையே மாற்று வழிதடங்களில் செல்ல கீழ்கண்டவாறு நடைமுறைபடுத்தப்படும். அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச்சில் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.
வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.
வாகன ஓட்டிகள்: ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர்ஸ் ரோடு ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயின்ட் (டாக்டர் அழகப்பா சாலை X ஈவிஆர் சாலையை சந்திப்பு) வழியாக சென்றடையலாம். எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications