13ம் தேதி வரை பள்ளி விடுமுறை.. மெட்ரோ பணியால் விரிசல்.. போராட்டத்தை அடுத்து பள்ளி நிர்வாகம் முடிவு!
சென்னை: சென்னை சாந்தோம் தனியார் பள்ளிக்கு விஜயதசமி முடியும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளால் பள்ளிக் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி பள்ளி முன்பு பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில், பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் டொமினிக் சாவியோ தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி வளாகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பள்ளி கட்டிடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி கட்டிடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியதோடு, பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு இன்று காலை திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு, விஜயதசமி முடியும் வரை, அதாவது அக்டோபர் 13 ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications