அப்படியே வெளிநாடுகளில் இருப்பது போல.. மொத்தமா மாற போகுது பஸ் பயணங்கள்! சென்னைக்கு வரும் தெறி பிளான்
சென்னை: தலைநகர் சென்னையில் பேருந்துகளில் பயணிப்போருக்கு உதவும் வகையில் அட்டகாசமான ஒரு திட்டம் வர இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பது போன்ற இத்திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.
நாட்டில் மிகவும் விரிவான பொது போக்குவரத்து நெட்வோர்க்கை கொண்ட ஒரு நகரமாகச் சென்னை இருக்கிறது. இங்கே மின்சார ரயில்கள், மெட்ரோ என பல பொது போக்குவரத்து சேவைகள் இருந்தாலும் கூட பேருந்துகள் தான் முதன்மையானதாக இருக்கிறது.

நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்னையில் நல்ல போக்குவரத்து சேவை இருக்கிறது. அதேநேரம் சென்னை பேருந்துகளில் இன்னும் பல வசதிகளைக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு பக்கம் இருக்கிறது.
புது வசதி: குறிப்பாகச் சென்னையில் பேருந்துகள் சரியான நேரத்தில் வருமா என்பதே மக்களுக்கு எப்போதும் பயமாக இருக்கும். பேருந்துகள் தாமதமாக வருவது பள்ளி, கல்லூரி, ஆபீஸ் செல்வோர் என அனைவரையும் பாதிக்கும். பொதுவாக வெளிநாடுகளில் பேருந்துகள் எப்போது வரும் என்பதைக் காட்ட முக்கிய பஸ் ஸ்டாண்டுகளில் பெரிய திரைகள் இருக்கும். அதில் வெறுமனே அட்டவணை மட்டும் வராமல்.. பேருந்துகள் தாமதமானால் அந்த தகவல்களும் சேர்ந்தே வரும்.
இதை அடாப்டிவ் சிக்னலிங் முறை என்று அழைக்கிறார்கள். அதாவது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மட்டும் மீண்டும் மீண்டும் வராமல்... எதாவது தாமதம் அல்லது மாற்றங்கள் இருந்தால் அதுவும் சேர்ந்தே இதில் அப்டேட் ஆகும். இதன் காரணமாகவே இதை அடாப்டிவ் சிக்னலிங் என்கிறார்கள். இது பயண நேரம் எவ்வளவு ஆகும் என்பதைக் கணக்கிடவும், பொது போக்குவரத்தின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் உதவும். இந்த வசதி சென்னைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரது விருப்பமாக இருந்தது.
வெளிநாட்டில் இருப்பதைப் போல: ஒரு வழியாக இந்த அடாப்டிவ் சிக்னலிங் முறை தான் சென்னையில் வர உள்ளது. மொத்தம் 165 இடங்களில் இதை அமைக்க உள்ளனர்.. முதற்கட்டமாக முக்கிய இடங்களில் இதை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் பேருந்து சேவையில் ஏற்படும் தாமதம், சேவைத் தடைகள் உள்ளிட்ட தகவல்களை மக்களால் தகவல்களை மக்களால் தெரிந்து கொள்ள முடியும். இப்போது இத்திட்டத்திற்காக நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
சமீபத்தில் இத்திட்டம் தொடர்பாகத் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இத்திட்டத்திற்கான பணிகளை விரைவுபடுத்த அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதற்கட்டமாகச் சோதனை முறையில் இத்திட்டத்தை சில முக்கிய இடங்களில் செயல்படுத்த உள்ளனர். பூந்தமல்லி சாலை மற்றும் அண்ணாசாலை போன்ற முக்கிய சாலைகளில் சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் நிதியளித்துள்ளது.
எந்த இடங்கள்: இத்திட்டத்திற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், வரும் மார்ச் மாதம் முதல் இத்திட்டம் சோதனை முறையில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை முறையில் 5 இடங்களில் அடாப்டிவ் சிக்னலிங் முறையை அமல்படுத்த உள்ளனர். மக்களிடையே கிடைக்கும் ரெஸ்பான்ஸை பொறுத்து அடுத்தகட்டமாக விரிவுபடுத்தப்படும். இந்த சோதனையில் கண்டறியப்படும் பிரச்சினைகள் எல்லாம் சரி செய்யப்பட்டு மொத்தம் சுமார் 160 இடங்களில் இந்த அடாப்டிவ் சிக்னலிங் முறையே வர இருக்கிறது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஈகா தியேட்டர், பச்சையப்பா கல்லூரி மற்றும் குருசாமி பாலம் அருகே இதற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராட்வே டெர்மினல், சிம்சன், அசோக் பில்லர், சாந்தி தியேட்டர், எல்ஐசி, ஸ்டெர்லிங் ரோடு, திருவள்ளூர் சிலை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஆகிய இடங்களும் இந்த திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டன.












Click it and Unblock the Notifications