சென்னை புறநகர்.. தமிழகத்துக்கே இது புதுசு.. தாம்பரத்தை அதிரவிட்ட "புள்ளி".. இதையும் விடாத எடப்பாடி
சென்னை: தமிழகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது பெருங்களத்தூர் சம்பவம்.. இதுகுறித்து அரசியல் கட்சிகளும் கண்டனங்களை பதிவு செய்ய துவங்கி உள்ளனர்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி... இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. நேற்றைய தினம் திடீரென பீர்க்கன்கரணை போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த ஹரி, 2 கொலையை செய்துவிட்டேன் என்று அதிர்ச்சி தகவலை கூறினார்.

சடலங்கள்: இதைக்கேட்டு மிரண்ட போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, 2 பேர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர்... பிறகு அந்த சடலங்களை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த கொலை சம்பவம் குறித்த விசாரணையும் கையில் எடுத்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் சொல்லும்போது, "கொலை செய்யப்பட்டது பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் தமிழரசன் என்பது தெரியவந்துள்ளது.
பெருங்களத்தூர்: பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சோனு (எ) கோபாலகிருஷ்ணன் என்பவர், கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசி உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்திருக்கிறார்.. கோபாலகிருஷ்ணனிடமிருந்து அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை, ஜில்லா (எ) தமிழரசன் ஆகிய 23 வயதுடைய இளைஞர்கள், போதைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் அண்ணாமலையும் தமிழரசனும் தனியாக போதைப் பொருள்களை விற்பனை செய்ய தொடங்கியிருக்கிறார்கள்... அதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், 2 பேரையுமே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக தனக்கு தெரிந்த ஆட்டோ டிரைவர் ஹரியை தொடர்பு கொண்டு சவாரிக்கு வரும்படி அழைத்திருக்கிறார். பிறகு ஹரியின் ஆட்டோவில் அண்ணாமலை உட்பட சிலர், பயங்கர ஆயுதங்களுடன் ஏறியிருக்கிறார்கள்..
ஆட்டோ டிரைவர்: அவர்கள் கையில், கத்தி, அரிவாளை பார்த்ததுமே பதறிப்போன ஹரி, இதெல்லாம் எதற்கு என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு அண்ணாமலை, "நீ ஆட்டோவை மட்டும் ஓட்டு" என்ற மிரட்டியிருக்கிறார். அதனால் ஹரியும் பயந்துக்கொண்டே ஆட்டோவை ஓட்டிச் சென்றிருக்கிறார்...
இதனிடையே, குண்டு மேடு பகுதிக்கு ஆட்டோவில் சென்ற கோபாலகிருஷ்ணன், அங்கு தன்னுடைய கூட்டாளிகளுடன் இறங்கியுள்ளார். அங்கிருந்த அண்ணாமலை, தமிழரசனை சுற்றி வளைத்த கோபாலகிருஷ்ணன் தலைமையிலான டீம், கத்தி, இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியது. குண்டு மேடு சுடுகாட்டிலேயே வைத்து 2 பேரையும் கொலை செய்திருக்கிறது.
கூட்டாளிகள்: இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ டிரைவர் ஹரி அலறியபடியே ஆட்டோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தகவலை சொன்னார்.. அவர் தந்த தகவலின் அடிப்படையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரின் கூட்டாளிகளைத் தேடி வருகிறோம்" என்றனர் போலீசார்.
போதைப் பொருள் விற்பனை தொழில் போட்டிக்காக நடந்த இரட்டை கொலை சம்பவத்தினால் சென்னை புறநகர் பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எடப்பாடி சொல்லி உள்ளதாவது:
போட்டி சண்டை: "இதுவரை கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் வியாபாரம் தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில், தங்கள் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் யார் தாதா? என்று போட்டி சண்டை இதுவரை ஏற்பட்டதில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் 2.7.2024 அன்று அதிகாலை, தனியார் கல்லூரிகள் அதிகமுள்ள சென்னை புறநகர் பகுதியான பெருங்களத்தூரில், கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்கும் ஒரு பகுதிக்கு யார் தாதா என்ற கோஷ்டி சண்டை ஏற்பட்டு, முடிவில் இச்சண்டை இரண்டு இளைஞர்கள் படுகொலையாக மாறியிருப்பது தமிழகத்திற்கே புதிது என்று இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக அரசு: தி.மு.க. திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு காவல்துறையின் தோல்விகளில் இதுவும் ஒன்று என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இனியாவது அரசியல் குறுக்கீடின்றி தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையை அடியோடு நிறுத்த தேவையான கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications