சென்னை அருகே கூவம் கரையோர வீடுகளை அகற்ற நோட்டீஸ்.. எதிர்த்தவர்களை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னை அருகே திருவேற்காட்டில் கூவம் கரையோர வீடுகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி நோட்டீஸ் ஒட்டிச் சென்றதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 100 பேர் வரை கைதானார்கள்.
சென்னையை அடுத்து உள்ளது திருவேற்காடு நகராட்சி..இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை புறநகர் பகுதியாகும். திருவேற்காடு நகரில் பெருமாள் கோவில் தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் கூவம் நதிக்கரையை ஒட்டிய இந்த குடியிருப்புகளில் மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள வீடுகளை அகற்றுவதற்கு வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்கு கூவம் நதிக்கரையோரம் குடியிருக்கும் 100க்கணக்ககான பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வருவாய்த்துறையினர், கூவத்தை ஒட்டியுள்ள நீர்நிலைப்பகுதிகளில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளிக்கிழமையான நேற்று வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வீடுகளை அகற்றுவதற்காக இதுவரை கணக்கெடுத்த வீடுகளுக்கு நேரில் வந்து நோட்டீஸ் ஒட்ட முயன்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
நோட்டீஸ் ஒட்ட முயன்ற அதிகாரிகளை சுற்றி வளைத்த பொது மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றதால்,போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார், மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து அற்புறப்படுத்தினர். தொடர்ந்து கைதான அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து அகற்றப்பட உள்ள வீடுகளில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையே நோட்டீஸ் ஒட்டிய பிறகு போலீசார் மண்டபத்தில் இருந்த மக்களை விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications