விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து முதல்வர் பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு வெளியீடு
சென்னை: கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வரும் விசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், மாவட்ட வேளாண் துணை இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம். இவைதவிர, மாநில அளவில் 044 - 22253884, 22253885, 22253496, 95000 91904 என்ற எண்களை (10 a.m - 6 p.m) தொடர்பு கொள்ளலாம்.

தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டும், இன்னும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை கருதியும், விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் "பயன்பாட்டு கட்டணத் தொகை வரும் 30.4.2020 வரை வசூலிக்கப்படாது". இத்தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.
பொதுமக்களுக்கு நியாயமான விலையில், தரமான காய்கறிகள், பழங்களை வழங்கிடவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், விவசாயிகளிடம் நேரடியாக சென்று கொள்முதல் செய்திட தெரிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடனாக வழங்கப்படும்.
கூட்டுப் பண்ணைய விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை, நகர்ப் புறங்களிலுள்ள நுகர்வோருக்கு, அவர்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சென்று, கூடுதலாக 500 (தோட்டக்கலை துறையின்) நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில், பொது மக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1% சந்தை கட்டணத்தை வரும் 30.4.2020 வரை செலுத்திட வேண்டியதில்லை" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications