கஜா பாதித்த பகுதிகளுக்கு தார்ப்பாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு
தற்காலிக தார்ப்பாய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை: கஜா புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள் மூலம் கூரை அமைக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயல் கடந்து போய் ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் டெல்டா மக்கள் வீடு, உணவின்றி தவித்து வருகின்றனர். மீட்பு பணிகளும் ஒரு பக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சேதம் அதிகமாகி விட்டதால், தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடமும் உதவி கோரப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடமும் முதல்வர் நேரில் எடுத்துரைத்துள்ளார்.

வேண்டுகோள்
இதையடுத்து, கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் கூடிய சீக்கிரம் வரவுள்ளது. இதை தவிர புயல் நிவாரண நிதிகளுக்கு உதவி செய்யுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார். இதையடுத்து முதல்வர் நிவாரண நிதியிலும் உதவிகள் சேர்ந்து வருகிறது.

முதல்வர் அறிக்கை
என்றாலும், நிறைய கூரை வீடுகள் புயல் காற்றால் பறந்து போய்விட்டது. இதனால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள் மூலம் கூரை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது சம்பந்தமாக அவர் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

தற்காலிக தார்ப்பாய்
அந்த அறிக்கையில் தார்ப்பாய் அளித்தால் உதவியாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கையாக சொன்னார்கள்.அந்த கோரிக்கையை ஏற்றே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் விளக்கம்
மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தார்ப்பாய் வாங்கி உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications