ஒன்னு ஸ்டாலின்.. இல்லாட்டி எடப்பாடியார்.. மீண்டும் மீண்டும் "திராவிடம்".. அப்ப அவங்க எல்லாம்..?
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை
சென்னை: அதாவது இரண்டே இரண்டு கட்சிதான்.. இரண்டே இரண்டே சக்திதான்.. நோ மாற்று சக்தி.. திராவிடமே மீண்டும் வெல்ல போகிறது.. இதைதான் புதியதலைமுறை உள்ளிட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன..!
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவும், அதிமுகவும் மட்டுமே தமிழக மண்ணை ஆண்டு கொண்டிருக்கின்றன.. இப்படி ஆள்வதற்கு பல கட்சிகள் உறுதுணையாகவும், கூட்டணியில் பங்கு வகித்து உதவியாகவும் இருந்து வருகின்றன..
ஆனால், எந்த கட்சியும் இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இதுவரை இருந்தது இல்லை.. அவ்வளவு ஏன், இதற்காக பலர் முயற்சித்தும் தோல்வியை தழுவி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியவில்லை. எத்தனையோ பேர் புறப்பட்டு வந்தனர்.. எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினர்.

மக்கள் நலக்கூட்டணி
பல வருடங்கள் கழித்து, 'மக்கள் நலக் கூட்டணி" என்ற ஒன்று பரபரப்பை கிளப்பியது... திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று சொல்லி கொண்டு வந்தது.. அதனாலேயே அது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.. அவர்களால் திமுகவைத்தான் வர விடாமல் தடுக்க முடிந்ததே தவிர மாற்றாக இன்னொரு திராவிடக் கட்சிதான் ஆட்சியில் அமர்ந்தது.

மாற்று
திராவிடத்துக்கு மாற்று என்று பாஜக வந்தது.. ஆனால், வந்த வேகத்திலேயே தூக்கி எறிந்துவிட்டது இந்த தமிழகம்.. இப்போதுவரை பாஜக, தமிழகத்தில் கால் ஊன்ற முடியாமல், மலராத தாமரையுடன் போராடி கொண்டிருக்கிறது.. பாஜகவை போலவே மாற்று என்று கமல் வந்தார்.. சீமான் வந்தார்.. ஆனால், இவர்கள் என்னதான் நியாயமாக பேசினாலும், என்னதான் மாற்று அரசியலை முன்வைத்தாலும், இவர்கள் பாஜகவின் பி-டீம் என்ற பிம்பத்தையே இன்னமும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்தை வைத்து திராவிடத்தை சரிக்க முயற்சிகள் நடந்தன. தலைகீழாக நின்று பார்த்தனர். ஆனால் ரஜினியோ, திராவிடத்தை எதிர்க்கக் கூடிய தெம்பு தனக்கு இல்லை என்பதை உணர்ந்து அவராகவே போருக்கு வராமலேயே போய் விட்டார். அப்படியானால், திராவிட சக்திகளுக்கு எதிராக, ஜனநாயக நெறிகளை காக்கக்கூடிய வலுவான எதிர்க்கட்சி இல்லையா? அல்லது பிற கட்சிகளால் திமுக, அதிமுகவுக்கு ஈடு தரமுடியவில்லையா என்பது பல ஆண்டு கால கேள்வியாகவே தங்கியும், தேங்கியும் உள்ளது.. இது இந்த முறை தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்றே தெரிகிறது.. நேற்றைய புதிய தலைமுறை கருத்து கணிப்பை பார்த்தால் நமக்கு இந்த உண்மை நன்கு புலப்படும்.

அதிமுக
ஒன்று திமுக வரும் இல்லாட்டி அதிமுக வரும்.. அதிமுக வரும் இல்லாட்டி திமுக வரும்... முதலிடத்தை திமுக பெற்றால் அதிமுக 2வது இடத்தைப் பெறும்... திராவிடத்திற்கு மாற்றாக புதிய சக்தி உருவாகவில்லை என்பதை இந்த தேர்தல் கணிப்பு காட்டுகிறது... மாற்று சக்திகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யமோ, நாம் தமிழரோ இந்தத் தேர்தலில் ஒரு சீட் கூட வாங்க மாட்டார்கள் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது... இதன் மூலம் இப்போதைக்கு தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக எந்த சக்தியும் உருவாகவில்லை.. மக்களும் அதற்குத் தயாராக இல்லை என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

அரசியல் தொலைவு
இவர்களின் அரசியல் தொலைவு என்பது இன்னும் நெடுங்காலத்துக்கு உள்ளது.. திராவிடத்துக்கு மாற்றாக ஏன் வேறு சக்தி மக்களிடம் இடம் பெற முடியவில்லை என்றால் மக்கள் மனதில் இடம் பெறும் அளவுக்கு வேறு புதிய சக்திகள் இல்லை என்பதே உண்மை. ஒவ்வொருவரும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், திமுக, அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்றுதான் முயல்கிறார்களே தவிர.. மக்களின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தங்களது செயல்பாடுகளை கொண்டிருக்கவில்லை.

சீமான்
நாம் தமிழர் கட்சி கொள்கை ரீதியாக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும் அக்கட்சி இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமாகவே உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. மக்கள் மனசில் இடம் பெற வேண்டிய அளவுக்கு இவர்கள் தங்களை மேலும் ஆழமாக நிலைநிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது.

திராவிடம்
இதில் தேசிய கட்சிகளான காங்கிரசும் அடக்கம், பாஜகவும் அடக்கம்.. கம்யூனிஸ்ட்டுகளும் அடக்கம்.. ஜாதி முத்திரை குத்தப்பட்டுள்ள விசிகவும் அடக்கம், பாமகவும் அடக்கம்.. ஆக மொத்தம், இங்கு திராவிடமே மீண்டும் மீண்டும் வெல்கிறது.. திமுக, அதிமுக தவிர தமிழகத்தில் வேறு கட்சிகள் ஆட்சி என்பது இப்போதைக்கு கனவிலும் நடக்காது போல..!












Click it and Unblock the Notifications