திடீரென ரேஷன் கடைக்குள் நுழைந்த முதல்வர் ஸ்டாலின்.. பொங்கல் தொகுப்பு சரியா இருக்கா.. அதிரடி ஆய்வு!
சென்னை: பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
கொரோனா பரவலால் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதில் குறிப்பிட்ட நாளின்படி, பொதுமக்கள் பொங்கல் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தினமும் 200 ரேஷன் கார்டுதாரர்கள் வீதம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி புகார்
இந்நிலையில், ரேஷனில் பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப்படவில்லை என்றும் கொடுக்கப்பட்ட தொகுப்பில் பல்லி இருப்பதும் சமூக வலைதளங்களில் பெரிதாக விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டசபைக்கு வெளியே அளித்த பேட்டியில், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கச் சென்ற பெண்கள் அவதிப்படுவதாக கூறி டேப்லெட்டில் வீடியோவை ஒளிபரப்பி நிருபர்களிடம் காண்பித்தார்.

ஸ்டாலின் ஆய்வு
சட்டசபைக்கு உள்ளேயும் இந்த பிரச்சினையை எடப்பாடி எழுப்பியிருந்தார். விமர்சனங்கள் வந்த நிலையில், அதை சரி செய்ய முதல்வர் ஸ்டாலின் தீவிர முயற்சிகளில் இறங்கிவிட்டார்.இந்நிலையில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சென்னையில் ஆய்வு
சென்னை தீவுத்திடல் அருகே ரேஷனில் பொங்கல் தொகுப்பு சரியாக வழங்கப்படுகிறதா என முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் ஆய்வு செய்த முதல்வர் பொங்கல் தொகுப்பையும் வழங்கினார். மேலும், பொங்கல் தொகுப்பு மக்களுக்கு முறையாக சென்று சேரவேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறித்தியிருக்கிறார் முதல்வர்.

பரிசு தொகுப்பு
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், துணிப்பை உள்பட மொத்தம் 21 பொருட்கள் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வோர் அட்டைக்கும் ரூ.505 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படவுள்ள நிலையில். இத்திட்டத்துக்காகத் தமிழக அரசு ரூ.1,088 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications