கிளாம்பாக்கத்தில் அடுத்து என்ன வரப்போகுது தெரியுமா? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட 100 புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்ந்த 100 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் சில இங்கே:

1. மெரினா கடற்கரை கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
2. குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறைக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
3. அனைத்து காவல் நிலையங்களுக்கும் கலவரத்தை அடக்க பயன்படும் உபகரணங்கள் வழங்கப்படும்.
4. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும்.
5. கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ரூ.5 கோடியில் செயல்திட்டம் செயல்படுத்தப்படும்.
6. மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத் துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்.
7. கோவை - பொள்ளாச்சி, திருப்பூர் - நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.
8. தமிழ்நாடு காவல்துறையில் பணியின் போது உயிரிழக்கும், காயமடையும் காவலர்களுக்கு கருணைத் தொகை உயர்த்தி வழங்கப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணியாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
9. தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மணிமங்கலம் காவல் நிலையத்தை பிரித்து படப்பை காவல் நிலையம் புதிதாக அமைக்கப்படும்.
10. மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு என காவல் நிலையம் உருவாக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூரில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும்.
11. சென்னை கொளத்தூர், கேளம்பாக்கம் மற்றும் செங்குன்றம் ஆகிய சரகங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
12. ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரங்களில் புதிய சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உருவாக்கப்படும்
13. ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக Q காவல் பிரிவு ஏற்படுத்தப்படும். பொன்னேரி காவல் சரகம் உருவாக்கப்படும்.
14. ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், காயமுற்றவர்களுக்கான நிதி 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
15.தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் 5 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆயப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.
16. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்படும்.
17. ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும்.
18. சமயபுரம், மேடவாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.
முன்னதாக, "தமிழ்நாடு அமைதி மிகுந்த மாநிலமாக திகழ்கிறது. திருவிழாக்களை எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக நடத்தி காட்டி உள்ளோம். அறிவிக்கப்பட்ட 190 திட்டங்களில் 179 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. குற்றங்களை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் இந்திய அளவில் முதல் இடத்தை நோக்கி முன்னேறி வருகின்றன. எனது அமைச்சரவை சகாக்களால் தான் அரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. அவர்களுக்கு நன்றி" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications