Madhya Kailash: மத்திய கைலாஷ் பகுதியில் L வடிவ மேம்பாலம் 16-ஆம் தேதி திறப்பு! என்னென்ன சிறப்புகள்?
சென்னை: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலை வரை அமைக்கப்பட்டுள்ள எல் வடிவ இருவழித்தட சாலை மேம்பாலத்தை வரும் 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சுமார் 60 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில், சர்தார் பட்டேல் சாலைப் பகுதியானது, அலுவலகம் மற்றும் கல்வி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக, சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலை (OMR) செல்லும் வாகனங்கள் எளிதில் பயணிக்க, இருவழித்தட மேம்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிண்டி டூ ராஜீவ் காந்தி சாலை
இம்மேம்பாலம் கிண்டியிலிருந்து ராஜீவ் காந்தி சாலை (OMR) செல்லும் வாகனங்களுக்கும், அடையாறிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் போக்குவரத்துக்கும் தடையற்ற நகர்வை உறுதி செய்கிறது. மேலும், கிண்டி-அடையாறு மற்றும் OMR-கிண்டி வழித்தடங்களுக்கு இலவச இடதுபுறத் திருப்பு (ஃப்ரீ லெஃப்ட்) வசதியும் உள்ளது.
60 கோடி ரூபாய்
இந்த மேம்பாலம் கட்டுவதற்காக ரூ.60.68 கோடி நிதி ஒதுக்க அரசு ஒப்புதல் அளித்தது. 652 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் இருவழி அகலத்துடன் ஒருவழிப் போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக இருபுறத் தடுப்புச் சுவர்களின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வளைவுகளில் சிரமமில்லாத பயணம்
வளைவுகளில் சிரமமற்ற பயணத்திற்கு "குறுக்குவெட்டுச் சாய்வு" (Super Elevation) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேகக் கட்டுப்பாடும், அதற்கான எச்சரிக்கை பலகைகளும் பாலத்தில் உண்டு. இரவுப் பாதுகாப்புக்கு மின் விளக்குகளும், சீரான பயணத்திற்கு வழித்தடக் கோடுகளும் விரைவில் அமைக்கப்படும்.
97 சதவீத பணிகள்
"L" வடிவ பல்வழிச்சாலை மேம்பாலத்தின் 97 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை பிப்ரவரி 16-ஆம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மேம்பாலம் மத்திய கைலாஷ் சந்திப்பின் போக்குவரத்து நெருக்கடியை வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலத்தின் உச்சி
ஆனால், பாலத்தின் உச்சியில் உள்ள கூர்மையான வளைவு வாகன ஓட்டிகளிடையே அச்சத்தையும், பாதுகாப்பு விவாதத்தையும் எழுப்பியுள்ளது. இந்த அபாயத்தன்மை குறித்து பலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மெட்ரோ தூண்
மத்திய கைலாஷ் சந்திப்பு குறுகலானது. அங்குள்ள கட்டடங்கள், கோயில், மெட்ரோ தூண்களுக்குச் சேதமின்றி பாலத்தைக் கட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு ஏற்பட்ட இட நெருக்கடியே கூர்மையான வளைவுக்குக் காரணம் எனச் சிலர் விளக்குகின்றனர்.
பாதுகாப்பை உறுதி செய்ய...
பாதுகாப்பை உறுதி செய்ய, வளைவுகளில் வாகன வேகம் மணிக்கு 20-30 கி.மீ ஆகக் குறைக்கப்படும். வேகத்தடைகள் (Rumble strips), எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பான்கள் (Reflectors), விபத்தில் வாகனங்கள் விழாதபடி பலமான தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐடி காரிடார் ஓஎம்ஆர் சாலை
இந்த மேம்பாலம், ஐ.டி. காரிடார் எனப்படும் ஓ.எம்.ஆர் சாலையில் நீண்டகால போக்குவரத்து நெரிசலுக்குப் பெரும் தீர்வு வழங்கும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த பாலத்தின் மீது பயணிக்கும் வாகனங்கள் இரு வழித்தடங்களிலும் ஒன்றுக் கொன்று இடையூறின்றி பயணிக்க ஏதுவாக பாலத்தின் ஓடுதளத்தில் வழித்தட கோடுகள் (Lane marking) அமைக்கப்படவுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணித்திற்கு தேவையான போதிய மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications