"நான் இருக்கும்வரை டங்ஸ்டன் சுரங்கம் வராது.. அப்படி வந்தால் நான் முதல்வராக இருக்கமாட்டேன்”: ஸ்டாலின்
சென்னை: “நான் முதலமைச்சராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமையாது. அப்படி அமைந்தால் நான் அந்தப் பொறுப்பில் இருக்க மாட்டேன்” என சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கும்போது கூறிள்ளார்.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தனித் தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்தச் சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் உருவாக்கப்பட்ட இந்த தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்கு எதிரான தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் - தமிழக முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த மசோதா அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினாலும், இதுவரை தமிழக அரசு கண்டிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் திமுக எம்பிக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? நாடாளுமன்றத்தை ஏன் முடக்கவில்லை?
டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நேரத்தில் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை. சுரங்கம் அமைந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்தியபின் தான் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு வேறு வழியின்றி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஒப்பந்தப்புள்ளி கோரிய போதே தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் திட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா நிறைவேறும் போது, திமுக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது. எங்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு மத்திய அரசு ஏலம் விட்டாலும், மாநில அரசு ஒருபோதும் அனுமதி கொடுக்காது. மக்கள் பிரச்சினையில், திமுக அரசு எந்த காலத்திலும் அலட்சியமாக இருந்ததில்லை.
நான் முதலமைச்சராக இருக்கும் வரை, தமிழ்நாட்டுக்குள் டங்க்ஸ்டன் சுரங்கம் அமையாது. அதனை தடுத்து நிறுத்துவோம். அப்படி அமைந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன். நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அதிமுக உறுப்பினர்களும் ஆதரவு அளித்து இந்த மசோதாவை நிறைவேற்றித் தரவேண்டும” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதைத்தொடர்ந்து, மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.












Click it and Unblock the Notifications